கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் – உலக வங்கி எச்சரிக்கை

கொரோனாவால் கல்வித்துறை மிக மோசமாக பாதிக்கப்படும் என்று உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி: உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பள்ளியில் சேராமல் இருந்தனர். படிப்பை பாதியில் நிறுத்துபவர்கள் அதிகமாக இருந்தனர். இதனால் கற்றல் குறைபாடு பெருமளவில் காணப்பட்டது.

கொரோனா வைரஸ் வந்த பிறகு, நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. உலகின் ஏறத்தாழ அனைத்து பகுதிகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நம் வாழ்நாளிலேயே கல்வித் துறைக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை பார்த்துவிட்டோம்.

இந்த சுகாதார நெருக்கடி நிலை நடவடிக்கைகள், உலகளாவிய மந்தநிலையை உண்டாக்கும்போது, இந்த பாதிப்பு இன்னும் மோசமாகும்.

இந்த பிரச்சினையை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல்கட்டமாக, பள்ளிகளை மூடி, குழந்தைகளின் உடல்நலத்தை பாதுகாத்து விட்டோம். அடுத்தகட்டமாக, பள்ளிகளை திறக்க திட்டம் வகுக்க வேண்டும்.

படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க வேண்டும். குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், விரைவான கற்றல் திறனுக்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்.

நீண்டகால பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், அதை சமாளிக்க தீவிர தன்மையுடைய கொள்கை நடவடிக்கை எடுப்பது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

malaimalar