பொருளாதார வீழ்ச்சி: அமெரிக்கா அதிர்ச்சி

வாஷிங்டன்: ”கொரோனா தாக்கத்தால், அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அதிர்ச்சி தருவதாக உள்ளது,” என, அதிபர், டொனால்டு டிரம்பின் மூத்த பொருளாதார ஆலோசகர், கெவின் ஹசட் கவலை தெரிவித்துள்ளார். கொரோனாவால், அமெரிக்க கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

13 லட்சத்திற்கும் அதிகமானோர், வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இறப்பு, 80 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஊரடங்கால், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.சுற்றுலா, ஓட்டல், போக்குவரத்து என, அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. கடந்த, இரண்டு மாதங்களில், 3.30 கோடி பேர் வேலைஇழந்துள்ளனர். அமெரிக்காவின், 33 கோடி மக்கள் தொகையில், 95 சதவீதம் பேர், ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ளனர். இது குறித்து, கெவின் ஹசட் கூறியதாவது:உலகின் மிக சக்தி வாய்ந்த அமெரிக்க பொருளாதாரம், வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மக்கள் உயிரைக் காக்க, பொருளாதாரத்தை முடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இயல்பு நிலை திரும்பத் துவங்கிஉள்ளது. அரசு, மூன்று கட்டமாக, ஊக்கச் சலுகை திட்டத்தை அறிவித்துஉள்ளது.எனினும், மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட அத்தொகை, இன்னும் மக்களுக்கு சென்றடையவில்லை.அடுத்த மாதத்திற்குள் சென்றடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது கட்ட ஊக்கச் சலுகை திட்டத்தை, டிரம்ப் அறிவிக்க கூடும். அது, கொரோனா செலவினங்களை சமாளிப்பதற்கான திட்டமாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, ”அமெரிக்க பொருளாதாரம், வரும், ஜூலை முதல் மீண்டும் எழுச்சி பெறும்,” என, அந்நாட்டு, நிதிஅமைச்சர், ஸ்டீவன் நுசின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ”அமெரிக்க பொருளாதார சரிவிற்கு யாரும் காரணம் கிடையாது.நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் மேலும் அதிகரிக்கும் என்ற போதிலும், தற்போது இயல்பு நிலை திரும்பத் துவங்கியுள்ளதால், அடுத்த ஆண்டு, அமெரிக்க பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும்,” என, அவர் கூறியுள்ளார்.

dinamalar