மெக்சிகோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 5 பேர் பலி

மெக்சிகோ நிலநடுக்கம்

மெக்சிகோவில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மெக்சிகோசிட்டி: மெக்சிகோ நாட்டின் தெற்குபகுதியில் ஒக்சாக்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒக்சாக்கா மட்டும் இன்றி 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் உணரப்பட்டது.

பல இடங்களில் வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. குறிப்பாக ஒக்சாக்கா மாகாணத்தில் 5 ஆஸ்பத்திரிகள் பலத்த சேதம் அடைந்தன.

அங்கு மேலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல இடங்களில் கட்டிட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. எனினும் அவர்களை பத்திரமாக மீட்பதற்காக பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

malaimalar