ஆப்கானிஸ்தான்: தலிபான்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 12 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் தவறுதலாக 12 குழந்தைகள் உயிரிழந்தனர்.

காபுல்: ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த உள்நாட்டு போரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான்கள்- அமெரிக்கா இடையே உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, கத்தார் தலைநகர் தோகாவில் தலிபான்களுக்கும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைதி பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் வந்தாலும் தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தங்கள் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் தாஹர் மாகாணம் பஹர்க் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக நேற்று பாதுகாப்புபடையினர் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் அமைந்திருந்த வீடுகளில் பதுங்கி இருந்த தலிபான் பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் சென்ற வாகனங்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியும், வெடிகுண்டுகளை வீசியும் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் பாதுகாப்புப்படையினர் 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தலிபான்களின் இந்த கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் திட்டமிட்டனர்.

இதையடுத்து, பஹர்க் மாவட்டத்தில் உள்ள ஒரு மத பள்ளிக்கூடத்தில்

தலிபான் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, அந்த மத பள்ளிக்கூடம் மீது ஆப்கானிஸ்தான் அரசுப்படைகள் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

ஆனால், தாக்குதல் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னரே அந்த மதபள்ளிக்கூடத்தில் இருந்து தலிபான் பங்கரவாதிகள் வெளியேறிவிட்டனர். ஆனால், அரசுப்படையினர் நடத்திய தாக்குதலில் அந்த பள்ளியில் இருந்த குழந்தைகள் உள்பட பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த வான்வெளி தாக்குதலில் மதப்பள்ளியில் இருந்த 12 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், 14 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர்

தாக்குதலில் தலிபான் தளபதிகள் உள்பட 12 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது

malaimalar