கொரோனா தடுப்பு மாத்திரை தயாரிப்பு; பைசர் முடிவால் 95 நாடுகளுக்கு பலன்

ஜெனீவா : தாங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மாத்திரையை உற்பத்தி செய்ய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உரிமம் அளிக்க, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘பைசர்’ நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால், 95 நாடுகளில் மிகக் குறைந்த விலையில் தடுப்பு மாத்திரை கிடைக்கும்.

கொரோனாவுக்கு எதிராக, ‘பேக்ஸ்லோவிட்’ என்ற தடுப்பு மாத்திரையை பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது தற்போது பரிசோதனையில் உள்ளது.இந்நிலையில் எம்.பி.பி., எனப்படும் சர்வதேச மருந்து காப்புரிமை தொகுப்பு அமைப்புடன், பைசர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

உலகளவில் பல்வேறு மருந்துகளை குறைந்த விலையில் தயாரிப்பதற்கான காப்புரிமையை பகிர்ந்தளிக்க உருவாக்கப்பட்டதே இந்த அமைப்பு. தற்போது, இந்த அமைப்புடன் பைசர் ஒப்பந்தம் செய்துள்ளதன் வாயிலாக, அது தயாரிக்கும் கொரோனா தடுப்பு மாத்திரையை உற்பத்தி செய்யும் உரிமம், பல்வேறு நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

இதற்கான, ‘ராயல்டி’ எனப்படும் உரிமத் தொகையை பைசர் நிறுவனம் கோராது. இதன் மூலம், வளரும் மற்றும் பின்தங்கிய 95 நாடுகள், மிகப் பெரும் பலனடையும். உலக மக்கள் தொகையில், 53 சதவீதம் பேர் இந்த நாடுகளில் உள்ளனர். அவர்களுக்கு மிகக் குறைந்த விலையில், கொரோனா தடுப்பு மாத்திரை கிடைக்கும்.

dailythanthi