90 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தியதால் லாக்டவுனுக்கு அவசியமில்லை- ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் இன்று புதிதாக 2,566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் நுழைந்துள்ள ஒமைக்ரான் தொற்றால், பாதிப்பு எண்ணிக்கை வேகமாக பரவி வருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பொது மக்கள் கூடினால் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதால்,  நெதர்லாந்து உள்ளிட்ட சில நாடுகள் ஊரடங்கு அறிவித்துள்ளன.

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் இன்று புதிதாக 2,566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இதன் எண்ணிக்கை 2,482-ஆக இருந்தது.

ஆஸ்திரேலியாவில் கொரோனா அல்லது புது வகை கொரோனா தொற்றுகள் அதிகரித்தாலும் ஊரடங்கு பிறப்பிக்க அவசியம் இல்லை என்று சுகாதார அமைச்சர் கிரெக் ஹன்ட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேற்கொண்டு அவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் 2 தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர். இதனால், கொரோனா, ஒமைக்ரான் தொற்று பரவலைத் தடுக்க கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் கடுமையான ஊரடங்கை மீண்டும் அமல்படுத்திய நெதர்லாந்தை ஆஸ்திரேலியா பின்பற்றத் தேவையில்லை.

நாட்டின் அதிக தடுப்பூசி விகிதம் மக்களை மருத்துவனையில் இருந்து தள்ளி வைக்கும். நாங்கள் கோடைகாலத்திற்குச் சென்றுக் கொண்டிருக்கிறோம். மிகவும் மாறுபட்ட சூழ்நிலைகள் இங்கு உள்ளன. தடுப்பூசி செலுத்திய விகிதத்தில் உலகிலேயே முன்னிலையில் இருக்கிறோம்.

ஆஸ்திரேலியாவை விட நெதர்லாந்து அதிக கொரோனா தொற்று மற்றும் இறப்புகளை சந்தித்துள்ளது. மேலும் குளிர்காலத்தால் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது.

இருப்பினும், நாங்கள் நன்கு தயாராக இருக்கிறோம். தொடர்ந்து ஒரு அற்புதமான வேலையைச் செய்கிறோம். இது அமைதிக்கான நேரம். ஆனால், நியூ சவுத் வேல்ஸின் வெற்றிக்கு தடுப்பூசி போடுவது முக்கியம் என்பதால், வெளியே சென்று உங்கள் பூஸ்டர் ஷாட் எடுப்பதற்கும் இது ஒரு முக்கியமான நேரம்

இவ்வாறு அவர் கூறினார்.