இஸ்ரேல் நாட்டில் துப்பாக்கிச் சூடு- 2 பேர் உயிரிழப்பு, 8 பேர் படுகாயம்

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங்கள் நிறைந்த பகுதியில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும்,  8 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் இச்சிலோவ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இதில் மூன்று பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டெல் அவிவ் நகரைச் சுற்றி பல இடங்களில் துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அவசர சேவை தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும்

பாலஸ்தீனியர்களின் அண்மை கால தாக்குதல்களின் தொடர்ச்சியாக இது கருதப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள் பொதுமக்கள் அங்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.  இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் இஸ்ரேலிய ராணுவ தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.\

இஸ்ரேலில் நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்த உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அரசுடன் தொடர்பில் இருப்பதாகவும்,  பயங்கரவாதம் மற்றும் வன்முறையை எதிர்கொள்வதில் அமெரிக்கா உறுதியாக நிற்பதாகவும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

 

Malaimalar