இராகவன் கருப்பையா- மூத்த எழுத்தாளர் துளசி சுந்தரத்தின் ‘அழியாத சுவடுகள்’ எனும் ஒரு வரலாற்று நூல் எதிர்வரும் சனிக்கிழமை 10ஆம் தேதி கோலாலம்பூரில் வெளியீடு காணவிருக்கிறது.
நம் நாட்டில் ஜப்பானியர் காலத்தின் போது நிகழ்ந்த அனுபவங்களை நினைவுகூறும் இந்நூல் தலைநகர் பிரிக்ஃபீல்ஸில் உள்ள பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்படும்.
சிறுமியாக இருந்த போது, ஜப்பானியர் ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்கள், கண்ட, கேட்ட நிகழ்வுகள் ஆகியவற்றை மனக்கோப்பிலிருந்து ‘அழியாத சுவடுகளாக’ நூல் வடிவம் ஆக்கியிருப்பது அவரின் எழுத்துப்பணியில் மற்றொரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும்.
மலேசிய இலங்கையர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் யோகேஸ்வரன் அரியநாயகம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் முதல் நூலை தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் சகாதேவன் பெற்றுக் கொள்வார் என துளசி சுந்தரம் குறிப்பிட்டார்.
இந்நூலின் விற்பனையின் வழி கிடைக்கும் மொத்தத் தொகையையும் குவாந்தான் சித்தி விநாயகர் ஆலய மண்டபத்திற்கான நிர்மாணிப்புக்கு நன்கொடையாக வழங்கவுள்ள அவர், இதுவரையில் 3 நூல்களை எழுதியுள்ளார்.
கடந்த 1958ஆம் ஆண்டிலிருந்து தமிழ் எழுத்துத் துறையில் தீவிர ஆர்வம் காட்டி வரும், பணி ஓய்வு பெற்ற ஆசிரியையான 87 வயது துளசி, தமது முதல் நூலை 1998ஆம் ஆண்டில் வெளியிட்டார்.
‘பிள்ளை நிலா’ எனும் தலைப்பிலான அந்நூலின் விற்பனையின் வழி கிடைத்த மொத்தத் தொகையையும் குவாந்தான், ஜாலான் பெஞ்சரா(தற்பொழுது இந்திரா மக்கோத்தா) தமிழ் பள்ளிக்கு பேருந்து ஒன்றை வாங்க அவர் நன்கொடையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேல் தமது சீரிய எழுத்துக்களுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இந்த கொடை நெஞ்சரின் 3 பிள்ளைகளும் தத்தம் துறைகளில் சிறந்து விளங்கும் பட்டதாரிகளாவர்.
மூத்த மகன் பணி ஓய்வு பெற்ற, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர். இரண்டாவது மகள் ஒரு தமிழ் பள்ளி ஆசிரியை. மூன்றாவது மகள் கனடாவில் மருந்தக வல்லுநராக உள்ளார் என துளசி சுந்தரம் குறிப்பிட்டார்.