காஸாவை போலவே, தென் சூடானுக்கும் உதவி தேவை

இராகவன் கருப்பையா- போரினால் சீரழிந்துள்ள பாலஸ்தீனின் காஸாவுக்கு உதவ முற்படுவதைப் போல, பட்டினியால் வாடிக் கொண்டிருக்கும் மில்லியன் கணக்கான தென் சூடான் மக்களுக்கும் உதவுவது குறித்து மலேசியா பரிசீலிக்க வேண்டும்.

சுமார் 12 மில்லியன் பேரை மக்கள் தொகையாகக் கொண்ட அந்த கிழக்கு ஆஃப்ரிக்க நாட்டில் பாதிக்கும் மேற்பட்டோர் கடுமையான வறுமையில் அவதியுறுவதாக ஐ.நா. இவ்வாரம் அறிவித்தது.

சூடானிடமிருந்து கடந்த 2011ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது முதல் அரசியல்வாதிகளின் தொடரான பதவிப் போராட்டத்தில் சிக்கிக் கொண்டுள்ள அந்நாடு, தற்பொழுது நிலைகுலைந்துத் திண்டாடுகிறது.

நாட்டு மக்களின் நலனில் கவனம் செலுத்துவதற்கு உருப்படியான ஆட்சி இல்லாத பட்சத்தில், பொது மக்களில் பெரும் பகுதியினர் பசியாலும் பட்டினியாலும் பரிதவிக்கின்றனர்.

இவர்களை உடனடியாக காப்பாற்றியாக வேண்டும் என ஐ.நா. அவசர வேண்டுகோள் விடுத்துள்ளதை மனிதாபிமானக் கோணத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே பாலஸ்தீனின் காஸாவுக்கு உதவிப் பொருள்களோடு சென்ற தொண்டூழியர்கள் தென் சூடானுக்கும் அத்தகைய முன்னெடுப்பை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்..

மலேசியாவைச் சேர்ந்த எண்ணற்ற தொண்டூழியர்கள் குறைந்த பட்சம் 3 தடவை பாலஸ்தீனின் காஸாவில் அவதியுறும் மக்களுக்கான உதவிப் பொருள்களோடு அங்குச் செல்ல முற்பட்டது நாம் எல்லாரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட அராஜகத்தால் ஒரு தடவை கூட அம்முயற்சி நிறைவேறவில்லை என்பது நமக்கெல்லாம் வருத்தமளிக்கும் விஷயமாகும்.

உணவுப் பொருள்கள், மருந்து வகைகள் மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்களோடு அங்குச் சென்ற தொண்டூழியர்களின் படகுகளை வழிமறித்த இஸ்ரேல் ராணுவத்தினர் அவர்களை கைது செய்தது மட்டுமின்றி அவர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே காஸாவிற்குள் நுழைவதற்கு இத்தகைய சிக்கல் இருக்கும் பட்சத்தில், நமது தொண்டூழியர்கள் தென் சூடானின் பக்கம் தங்களுடைய கவனத்தை செலுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும்.

தென் சூடானுக்கும் மலேசியாவுக்கும் இடையில் தூதரக உறவுகள் இல்லை. எனவே அதன் அண்டை நாடுகளான உகாண்டா அல்லது கென்யா வழியாக தேவையான உதவிப் பொருள்களை நமது தொண்டூழியர்கள் அனுப்ப வகை செய்யலாம்.

காஸாவை நோக்கிச் சென்ற தொண்டூழியர்களுக்கு வழங்கிய ஆதரவைப் போல தென் சூடானுக்கான முயற்சிகளுக்கும் நமது அரசாங்கம் ஆதரவளித்து ஊக்கமளிக்க வேண்டும்.