செல்வந்தர்களான மலேசியர்களுக்கு எரிபொருள் மானியங்களை நீக்குவதற்கு அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது, இருப்பினும் எந்த வருமானப் பிரிவினர் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய தற்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தக் கொள்கையானது மேல்-நடுத்தர வர்க்கத்தினருக்கு (upper-middle-income group) எதிர்பாராத சுமையை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய இத்தகைய ஆய்வு அவசியம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
கார்ப்பரேட் பிரமுகர் ஹசன் மரிக்கான் தலைமையிலான தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சிலின் கீழ் உள்ள நெருக்கடி மேலாண்மை பணிக்குழுவால் இந்த விவகாரம் தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
ஹசன் தலைமையிலான பணிக்குழுவால் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது. அவர்கள் அதை ஆய்வு செய்தனர், மேலும் இது T5, T10, T15 அல்லது T20 ஆகியவர்களில் யாரை உள்ளடக்க வேண்டும் என்பது குறித்து விவாதங்கள் நடந்தன.
“கொள்கையளவில், நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்… ஆனால் இது மேல்-நடுத்தர வர்க்கத்தைப் பாதிக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். எனவே, அவர்கள் இது குறித்து பணியாற்றி வருகிறார்கள், விரைவில் இதை இறுதி செய்வோம் என்று நம்புகிறேன்,” என அன்வார் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே கூறுகையில், T20 வருமானப் பிரிவினருக்கான எரிபொருள் மானியங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானத்தை அடுத்த அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் துல்லியமான மானிய முறை மூலம் கிடைக்கும் சேமிப்பை, அதிகத் தேவையுள்ள குறைந்த வருமானப் பிரிவினருக்கு உதவ புத்ராஜெயா பயன்படுத்த முடியும் என்று அவர் வாதிட்டார்.
“எனவே T20 பிரிவினருக்கான மானியங்களை எடுத்து அவற்றை B40 மற்றும் M40 பிரிவினருக்குத் திருப்புவது சிறப்பாக இருக்கும். 400 லிட்டர் மானிய விலை பெட்ரோலுக்காக மாதம் ரிம 200 முதல் ரிம 400 வரை செலவழிப்பது செல்வந்தர்களுக்கு ஒரு பெரிய விஷயமல்ல.
அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மல் சலே
“ஆனால் இந்த ரிம 200 முதல் ரிம 400 என்பது B40 மற்றும் M40 பிரிவினருக்கு மிகவும் பெரியது. அதனால்தான் எரிபொருள் மானியங்களை மேலும் சீரமைக்கவும், உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு மட்டும் வழங்கவும் எங்கள் முன்மொழிவுகளில் கோரியுள்ளோம்,” என்று அக்மல் கூறினார்.
இருப்பினும், இந்த முன்மொழிவுக்கு பக்காத்தான் ஹராப்பான் இளைஞர் பிரிவு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வூ கா லியோங் கூறுகையில், சில குறிப்பிட்ட குழுக்களுக்கு எதிரான பகைமை உணர்வு எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது என்றார்.
“சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், குறிப்பாக நிதி ரீதியாக அதிக வசதி படைத்தவர்கள், பல ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்துவதற்கு ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை”.
“காலப்போக்கில் மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் அது சில குழுக்களைக் குறை கூறும் அணுகுமுறையின் மூலம் இருக்கக்கூடாது,” என்று வூ கூறினார்.
























