நார்வே ஏவுகணை ஒப்பந்தப் பின்னடைவுக்குப் பின் இத்தாலி ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பரிசீலனை

நார்வே நாட்டு நிறுவனத்துடனான கடற்படைத் தாக்குதல் ஏவுகணை ஒப்பந்தம், அந்நாட்டின் ஏற்றுமதி உரிம ரத்தால் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி, ஜப்பான், பிரான்ஸ், துருக்கி, தென்கொரியா போன்ற நாடுகளின் ஏவுகணை அமைப்புகளை மலேசியா பரிசீலித்து வருகிறது.

புதிய ஆர்டர்களை வழங்கினால் ஐந்து ஆண்டுகள் வரை தாமதம் ஏற்படலாம் என்பதால், ஏற்கனவே உற்பத்தியில் இருக்கும் ஏவுகணைகளைப் பெறுவதற்கே மலேசியா முன்னுரிமை அளிக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் காலிட் நோர்டின் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

கோத்தா திங்கியில் நடைபெற்ற ஒரு நிகழ்வின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் புதிய ஆர்டரை வழங்க முடியாது, ஏனெனில் அதற்கு நாங்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். அது ஒரு தெரிவு அல்ல. ஏற்கனவே உற்பத்தியில் இருப்பவற்றையே நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறினார்.

ஒருவேளை அமெரிக்கா தனது சொந்தக் கப்பல்களுக்காக சிலவற்றை தயாரித்துக் கொண்டிருக்கலாம், இத்தாலியும் அவ்வாறே செய்யலாம். கிடைக்கக்கூடிய அலகுகள் (units) இருந்தால், அவற்றை முதலில் கோர நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

மலேசியா தனது ஆறு கடலோரப் போர் க் கப்பல்களில் பொருத்துவதற்காக, 2018-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் கோங்ஸ்பெர்க் டிஃபென்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடமிருந்து இந்த அமைப்பை ஆர்டர் செய்தது. ஆனால், நார்வே அரசாங்கம் தனது பாதுகாப்பு தொழில்நுட்ப ஏற்றுமதி அதன் “கூட்டாளிகள் மற்றும் நெருங்கிய பங்காளிகளுக்கு” மட்டுமே வரம்பிடப்படும் என்று கூறி, அதன் ஏற்றுமதி அனுமதியை ரத்து செய்துள்ளது.

ஏற்கனவே கொள்முதல் விலையான 634 மில்லியன் ரிங்கிட் 95%-ஐ அரசாங்கம் செலுத்திவிட்டதால், நேரடி மற்றும் மறைமுக இழப்புகளுக்காக கோங்ஸ்பெர்க் நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான இழப்பீட்டை மலேசிய அரசாங்கம் தற்போது கோரி வருகிறது.

இந்த விவகாரத்தில் நார்வே மன்னிப்புக் கேட்டிருந்தாலும், அந்நிறுவனத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கை தொடரும் என்று காலிட் கூறினார்.

“மன்னிப்பு என்பது மன்னிப்பு தான், ஆனால் இழப்பீட்டுக் கோரிக்கை அப்படியே இருக்கிறது. நிறுவனத்திற்கு எதிரான வழக்கு தொடரும்.

“ஆனால் நார்வே மலேசியாவுடனான தனது நட்புறவைத் உண்மையிலேயே தக்கவைத்துக் கொள்ள விரும்பினால், 1 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகையைத் திருப்பித் தருவதற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் அது உதவ முடியும்,” என்று அவர் கூறினார்.

 

 

-fmt