சமூக ஊடகங்களில் இந்த சம்பவம் தொடர்பான காணொளி பரவிய 24 மணி நேரத்திற்குள், வாகனத்தில் துறையின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எச்சரிக்கை விளக்குகளைப் பயன்படுத்தியதாக நம்பப்படும் பாகிஸ்தான் நபர் ஒருவரை குடிவரவுத்துறை கைது செய்துள்ளது.
வெளிநாட்டு நபர் ஒருவர் குடிவரவுத்துறை லோகோவைக் கொண்ட வாகனத்தைப் பயன்படுத்துவதைக் காட்டும் காணொளியிலிருந்து பெறப்பட்ட உளவுத் தகவல்களைத் தொடர்ந்து, நேற்று மாலை 4.30 மணிக்கு செதாபக், பிவி3 பிளாட்டினம் ஹில் காண்டோமினியத்தில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக குடிவரவுத்துறை தலைமை இயக்குநர் சகாரியா ஷாபான் தெரிவித்தார்.
அங்குள்ள வளாகத்தை சோதனையிட்டதில், நாட்டில் தங்கும் காலத்தை விட அதிக நாட்கள் தங்கியிருந்த இந்தோனேசிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார். மேலும், அந்த நபரிடம் இருந்த, மற்ற நபர்களுக்குச் சொந்தமானது என்று நம்பப்படும் இரண்டு இந்தோனேசிய பாஸ்போர்ட்டுகளும் கண்டெடுக்கப்பட்டன.
காணொளியில் உள்ள நபர் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அந்த வீடியோ ஏப்ரல் 2025 இல் பதிவு செய்யப்பட்டது என்றும், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி தான் அந்த நபரின் மனைவியால் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக பதிவேற்றப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.
அந்த நபரின் மனைவி இந்தோனேசியாவில் இருக்கிறார், அவர் அங்கு இருந்தபோதே இந்த காணொளி பதிவேற்றப்பட்டது, என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு சட்டம் 1966 இன் பிரிவு 12(1)(f) மற்றும் குடிவரவுச் சட்டம் 1959/63 இன் கீழ் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்பட்டதன் பேரில் அந்த பாகிஸ்தான் நபர் கைது செய்யப்பட்டதாகவும், குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 15(1)(c) இன் கீழ் அந்த இந்தோனேசிய பெண் கைது செய்யப்பட்டதாகவும் சகாரியா தெரிவித்தார்.
இந்தக் கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து, காணொளியில் இடம்பெற்ற வாகனம் என்று நம்பப்படும் டொயோட்டா ஹிலக்ஸ் ரக வாகனத்தை, கோலாலம்பூர், ஜாலான் கூச்சிங்கில் உள்ள வாகனம் கழுவும் நிலையத்தில் அதிரடிப் படை குழுவினர் கண்டுபிடித்தனர்.
அந்த வாகனத்தின் உரிமையாளரான மற்றொரு பாகிஸ்தான் குடிமகனும், அவருடன் சேர்த்து நான்கு வங்காளதேசத்தவர்கள், மூன்று பாகிஸ்தானியர்கள் மற்றும் ஓர் இந்தியர் உட்பட மேலும் எட்டு வெளிநாட்டுத் தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டதாக சகாரியா தெரிவித்தார்.
வாகன உரிமையாளர் மீது குடிவரவுச் சட்டம் 1959/63 இன் பிரிவு 55B இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில், அந்த எட்டு தொழிலாளர்களும் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாததால், அதே சட்டத்தின் பிரிவு 6(1)(c) இன் கீழ் குற்றங்களைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படுகின்றனர்.
அந்த வாகனத்தின் உரிமையாளர் எவ்வித அதிகாரப்பூர்வ நோக்கமும் இன்றி, தனது தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவே லோகோ மற்றும் எச்சரிக்கை விளக்குகளைப் பொருத்தியதாக ஒப்புக்கொண்டதாகவும், இது ஒரு குற்றம் என்பது தனக்குத் தெரியாது என்று கூறியதாகவும் சகாரியா தெரிவித்தார். மேலும், அந்த காணொளி பரவுவதற்கு முன்பே லோகோ மற்றும் விளக்குகள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
-fmt
























