மலேசியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த, ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) அதிக கட்டமைப்பு சார்ந்த சட்டமைப்பை வழங்கும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுசியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் எதிர்ப்பு போதைப்பொருள் படைத் தலைமையகத்திற்கு நேற்று வருகை தந்த போது, அதன் இயக்குநர் ஜெனரல் அப்துல் மூயிட் அளித்த விளக்க உரையாடலின் போது இந்த முன்மொழிவு விவாதிக்கப்பட்டதாக சைஃபுதீன் கூறினார்.
வியாழக்கிழமை தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகையின் போது, தமது முகநூல் பதிவில் அவர் கூறியது:
“ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் போதைப்பொருள் கடத்தல் பாதைகளை நேரடியாக எதிர்கொள்ளும் பாகிஸ்தானின் புவியியல் அமைப்பு, மலேசியாவிற்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக, கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு கடத்தல் பாதைகள் நீடிப்பதால் பாகிஸ்தானுடனான ஒத்துழைப்பு அவசியமாகிறது. இந்த அச்சுறுத்தலை நாட்டின் எல்லைக்குள்ளோ அல்லது ஆசியான் பிராந்தியத்திற்குள்ளோ மட்டும் சுருக்கிக் கொண்டு தீர்க்க முடியாது.”
விலங்கு கொம்புகள் பறிமுதல்
பினாங்கு சர்வதேச விமான நிலையத்தில் (பாயான் லெப்பாஸ்) சுமார் ரிம 5,000 மதிப்புள்ள 45 சந்தேகிக்கும் வகையிலான விலங்கு கொம்புகளைக் கடத்த முயன்ற சம்பவத்தை எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை முறியடித்தது.
சீனாவின் குவாங்சோவில் இருந்து ‘சைனா சதர்ன்’ விமானத்தில் வந்த 57 வயதுடைய இந்தோனேசிய ஆடவர் ஒருவரின் லக்கேஜை வியாழக்கிழமை பரிசோதித்தபோது இந்த வனவிலங்கு பொருட்கள் கண்டறியப்பட்டதாக அந்த முகமை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (Act 716) பிரிவு 68(1)(b)-ன் கீழ் எவ்வித அனுமதி அல்லது செல்லுபடியாகும் ஆவணங்கள் இன்றி அவர் அந்தப் பொருட்களை எடுத்து வந்தது தெரியவந்தது. அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேல் விசாரணைக்காக வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
போலி சரக்கு பிரகடனம் மற்றும் இணையவழி மருந்துகள்
எம்.பி.எஸ் தலைவர் அம்ராஹி புவாங்
போலி சரக்கு பிரகடனங்கள் மற்றும் பலவீனமான இ-காமர்ஸ் கட்டுப்பாடுகள் காரணமாக, அதிக அளவிலான பதிவு செய்யப்படாத மருந்துகளும் அழகுசாதனப் பொருட்களும் மலேஷியாவிற்குள் நுழைய முடிகிறது என்று மலேசிய மருந்தியல் சங்கம் (MPS) தெரிவித்துள்ளது.
எம்பிஎஸ் தலைவர் அம்ராஹி புவாங் கூறுகையில், கடத்தல்காரர்கள் அபாயகரமான பொருட்களை சாதாரண வர்த்தகச் சரக்குகளுக்குள் மறைத்து, தொலைதூரக் கிடங்குகளைப் பயன்படுத்தி விநியோகம் செய்கின்றனர் என்றார். மேலும், சட்டவிரோத விற்பனையாளர்கள் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மருத்துவர்களின் போலி படங்கள், குரல்கள் மற்றும் மறைமுக வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர்.
கண்டறியப்பட்டவுடன் பழைய கணக்குகளை மூடிவிட்டு புதிய கணக்குகளை உருவாக்கும் இத்தகைய நபர்களைத் தடுக்க நடவடிக்கைகள் தேவை எனக் குறிப்பிட்ட அவர், கோத்தா பாருவில் உள்ள 7 இடங்களில் ஆகஸ்ட் 19 அன்று கிளந்தான் சுகாதாரத் துறை நடத்திய சோதனையில் ரிம 60,000 மதிப்பிலான 584 நச்சுப் பொருட்கள் அடங்கிய பதிவு செய்யப்படாத தயாரிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டினார்.
























