கெடாவில் பெருங்கூட்டம் பக்காத்தானுக்கு ஒரு நல்ல சகுனம்

உங்கள் கருத்து: “என்னதான் ரொக்கப் பணத்தைக் கொடுத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்துகொடுத்தாலும்கூட பக்காத்தான் நிகழ்வுகளுக்கு வரும் கூட்டத்தைப் போன்று அம்னோவால் திரட்ட முடிவதில்லை.”

அலோர் ஸ்டாரில் பக்காத்தான் கூட்டத்தில் 10,000பேர்

டாக்ஸ்: கெடாவில் பக்காத்தான் ரக்யாட் நிகழ்வுக்கு 10,000பேர் திரண்டனர். அதுவும் மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் பேச்சைக் கேட்பதற்கு.

அம்னோ கூட்டங்களுக்கு மக்களைத் திரட்டிக்கொண்டு வர வழக்கமாகச் செய்யப்படுவதுபோல், இங்கே பரிசுப் பொருள்கள் கொடுக்கப்படவில்லை; பணம் கொடுக்கப்படவில்லை.

என்னதான் ரொக்கப் பணத்தைக் கொடுத்து போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்துகொடுத்து  பங்கேற்பாளர்களுக்குப் பாதுகாப்பு போன்றவற்றை அளித்தாலுங்கூட பக்காத்தான் நிகழ்வுகளுக்கு வரும் கூட்டத்தைப் போன்று அம்னோவால் திரட்ட முடிவதில்லை.

சரவாக்காரன்: இப்படிப்பட்ட கூட்டங்களைப் பார்க்க பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கு வயிற்றைக் கலக்கியிருக்குமே.

இனி, பக்காத்தான் கட்சிகள் கூடுதல் ஒற்றுமையைக் காண்பிக்க வேண்டும். தங்களுக்கே வாக்களிக்க மக்களை ஊக்கி உற்சாகப்படுத்த வேண்டும்.

அதாவது அவர்கள், நாட்டை எப்படி ஆளப்போகிறார்கள், ஒவ்வொரு மலேசியரையும் எப்படி வளப்படுத்தப்போகிறார்கள் என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். 

கட்சியில் உள்ள ஊழல்வாதிகள் தூக்கி எறியப்படுவார்கள் என்று அன்வார் கூறியிருக்கிறார். அது ஒரு நல்ல தொடக்கம். ஊழல்வாதிகள் தவறான வழிகளில் சேர்த்த செல்வமெல்லாம் மக்களுக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்.

அப்துல் தாயிப் மஹ்மூட், டாக்டர் மகாதிர் முகம்மட், நஜிப் அப்துல் ரசாக், மூசா அமான், முகம்மாட் கீர் தோயோ, சரிஷாட் அப்துல் ஜலில், ரபிடா அஜீஸ் முதலியோரும்  அவர்களின் குடும்பத்தாரும் எடுத்துக்கொண்டவற்றைத் திரும்பப் பெற வேண்டும்.

குறைந்தது ரிம10 பில்லியனாவது தேறும். அதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.

ராஜா அஹ்மட் தாஜுடின்:  மலேசியாவில் இரட்டைக் கட்சி-முறை நடைமுறையில் உள்ள காலம் வரும்  என்றே எப்போதும் நம்பி வந்துள்ளேன்.

12வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

வீரா: அம்னோ கூட்டமொன்றில் பல இன மக்களும் ஒருசேர கலந்துகொண்டது எப்போது?

அப்படிப்பட்ட கூட்டத்தில் மசீச/இகா/கெராக்கான் தலைவர்கள் அம்னோ கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பியது உண்டா, கர்பால் செய்ததைப் போல?

பெயரிலி: சனிக்கிழமை திரண்ட கூட்டத்தைப் பார்க்கும்போது நாடு முழுக்க அரசியல் சூழல் பக்காத்தானுக்கு சாதகமாக இருப்பதுபோலத்தான் தெரிகிறது.

ஆனால், கெடா விதிவிலக்காக இருக்கலாம். ஏனென்றால் அங்கு மலாய்க்காரர்-அல்லாதார் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பெரும்பாலோர் மாநிலத்துக்கு வெளியிலிருந்து வந்தவர்கள்போல் தெரிந்தார்கள். டிஏபியிலும் பிகேரிலும் உள்ள மலாய்க்காரர்-அல்லாத உறுப்பினர்களை அங்கு காண முடியவில்லை.

கெடா பக்காத்தானின் மலாய்க்காரர்-அல்லாத ஆதரவாளர்கள் என்ன ஆனார்கள்?

ஜெரார்ட் சேமுவேல் விஜயன்: 13வது பொதுத் தேர்தலில் பக்காத்தான் வெற்றிபெற்றாலும் அது 10, 20 இடங்களைக் கூடுதலாக பெற்ற ஒரு குறுகிய பெரும்பான்மையாகத்தான் இருக்கும்.

பெர்ட் டான்: பல்லாயிரக்கணக்கான மக்கள் சனிக்கிழமை பக்காத்தான் கூட்டத்துக்கு வந்தார்கள் என்பது செய்தித்தாள்களில் இடம்பெற வேண்டிய ஒரு செய்தியாகும்.

ஆனால், மசீச-வுக்குச் சொந்தமான த ஸ்டாரில் அது பற்றிய செய்தியையே காணவில்லை. பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால், பத்திரிகைகளுக்கு இப்படி வாய்ப்பூட்டுப் போடக்கூடாது. ஊடக சுதந்திரம் நிலவ வேண்டும்.

பொடே: அன்வாரின் கடந்த காலம் எப்படி இருந்தாலும் அதை ஒதுக்கி வைத்துவிட்டு சந்தேகத்தின் பலன் அவருக்குக் கொடுக்கப்பட வேண்டும்.

பக்காத்தான் செய்ய வேண்டிய முதல் வேலை அம்னோ/பிஎன் அரசாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு நாட்டை நல்ல நிலைக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும். பக்காத்தானில் உள்சண்டை கூடாது.

அங்கு, அன்வார் மட்டுமே ஒரே தலைவராக இருக்கப் போவதில்லை. இளைஞர்கள், தொலைநோக்கு உள்ளவர்கள் தலைமை ஏற்க முன்வருவார்கள்.

தலைமை மாறிக்கொண்டிருக்க வேண்டும். இல்லையேல், கடந்த 54 ஆண்டுகளாக என்ன நடந்ததோ அதுவே திரும்பவும் நடக்கும்.

TAGS: