மலேசியர்களின் நம்பிக்கைக்குரியவரா பிரதமர் நஜிப்?

உங்கள் கருத்து:“நஜிப், 23 வயதில் துணை அமைச்சர் ஆனார்.இப்போதுதான் 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர்கள் தம்மை நம்ப வேண்டும் என்கிறார்”

நம்பிக்கை’ வேண்டும்;இந்தியர்களுக்கு நஜிப்  அறிவுறுத்தல்

கீழைதேய மலேசியர்: முருகனுக்கு மாலைசூடி மகிழ வேண்டிய நாளில்  மிகப் பெரிய மாலை பிரதமர் நஜிப் ரசாக்குக்கும் ரோஸ்மா மன்சூருக்கும் அணிவிக்கப்பட்டதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது.

என்றுதான் பாடம் கற்றுக்கொள்ளப்போகிறோமோ? 50 ஆண்டுகள் வைத்த நம்பிக்கை போதாதா?இந்தியர்களில் ஏழைகளாக உள்ளவர்களுக்கு உதவாமல், சிறந்த கல்வி கிடைப்பதற்கு வழிசெய்யாமல் ரிம2மில்லியன் செலவில் பண்பாட்டு மையம் கட்டித்தருவதாக உறுதிகூறப்பட்டுள்ளது.

பல இனவாதி:அரசியல்வாதிகள் அவர்களின் எஜமானர்களைத் திருப்திப்படுத்த முனைகிறார்கள்.ஆனால், அவர்கள்  யாரைப் பிரதிநிதிக்கிறார்களோ அந்த மக்கள் தொடர்ந்து இன்னலைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மூதுரை உண்டு. ஒருவர் ஒருதடவை பொய் சொன்னால் அவர் பொய் சொன்ன குற்றத்துக்கு ஆளாவார்.அதே பொய்யை அவர் திரும்பத் திரும்பச் சொல்கிறார் என்றால் அதற்கு இடமளித்த நீங்கள்தான் குற்றவாளி.

கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாத இப்படிப்பட்டவர்களைத்தான் நம்பப் போகிறீர்களா?

தொழு: தொடங்கி விட்டாரய்யா,தொடங்கி விட்டாரய்யா. நஜிப் மறுபடியும்-“நீங்கள் எனக்கு உதவுங்கள், நான் உங்களுக்கு உதவுவேன்” -பல்லவியைத் தொடங்கி விட்டார். ஐயா, உங்கள் கட்சிக்கு வாக்களிக்கிறார்களோ இல்லையோ அரசமைப்புப்படி எல்லா இன மக்களையும் கவனமாகப்  பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உங்களுக்கு உண்டா, இல்லையா?

அது யாரய்யா, ஆர்.நடராஜா? அந்த ஆளையே இந்தியர்களுக்குப் பிடிக்காது. போயும், போயும் அவரிடம் இந்திய மக்களுக்கான வாக்குறுதிகளை வழங்குகிறீர்கள்.

அப்2யு: இனத்தையும் சமயத்தையும் வைத்து கையேந்திப் பிச்சை எடுக்கும் வெட்கம்கெட்ட மனிதர் ஒருவர் உண்டென்றால் அது நடராஜாதான்.

“நீங்கள் கொடுத்தால் உங்களுக்குக் கிடைக்கும்(நம்பிக்கை)”, என்று சொல்லியிருக்கிறார்.

சொற்ப தொகை கொடுத்தால் போதும் இந்திய பக்தகோடிகளை வாங்கி விடலாம் என்கிறாரா? பக்தர்கள் இவரைத்தான் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

லின்: கல்வி, மருத்துவ சேவைகள் முதலியவை நம் உரிமைகள்.அவற்றுக்காக யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லை.

ஆனால் இதுதான்(அம்னோவிடம் கையேந்தி நிற்பது) மஇகா-வின் இயல்பு (மசீச மட்டுமென்ன அதுவும் இப்படித்தான்.

கவனிப்பாளன்: நடராஜாவைப் போன்றவர்களும் மஇகா, மசீச தலைவர்களும் தேர்தல் நேரத்தில் வாக்குகள் பெறுவதற்காக அம்னோ வீசி எறியும் துண்டு துணுக்குகளைப் பொருக்கிக்கொள்வதிலேயே திருப்தி அடைந்து விடுவார்கள்.

மறுபுறம் இண்ட்ராபின் பி.உதயகுமாரைப் பாருங்கள். இந்தியர்களில் பரம ஏழைகளாக உள்ளவர்களுக்கு பெல்டா போன்ற நில உடைமைத் திட்டம் தேவை என்கிறார். வீடற்றவர்களுக்கு அடக்கவிலையில் வீடுகள் கிடைப்பதற்கு வகை செய்ய வேண்டும் என்கிறார்.அம்னோ எப்படியெல்லாம் சிறுபான்மை மக்களைப் பொருளாதார ரீதியில் ஒதுக்கிவைக்கும் கொள்கையைப் பின்பற்றி வருகிறது என்பதைக் கவனப்படுத்துக்கிறார்.

வரிப்பணத்தில் பெரும்பகுதியை பெரும்பான்மை மலாய்க்காரர்களுக்காக பயன்படுத்திக்கொள்வது, கணிசமான ஒரு பகுதியைத் தனக்காகவும் தன் அரசியல் பங்காளிகளான மஇகா, மசீச போன்றோருக்காகவும் சுருட்டிக்கொள்வது என்ற அடிப்படையில் வியூகம் அமைத்துக்கொண்டு அம்னோ செயல்பட்டு வருகிறது.

பிஎன் மட்டும் பெரும் பணத்தைச் சுருட்டிக்கொள்ளாமலிருந்தால் மலாய்க்காரர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு சிறுபான்மை இனத்தாரைச் சேர்ந்த ஏழைமக்களுக்கும் உதவிகள் கிடைக்கும்.எனவே,  வாக்களியுங்கள் அதம-வுக்கு(அம்னோ தவிர்த்த மற்றவர்களுக்கு).

விடையன்: சிபு தேர்தலில், “எனக்கு நீங்கள் உதவுங்கள்.உங்களுக்கு நான் உதவுவேன்”, என்று சொன்னபோது மக்களுக்குக் கையூட்டுக் கொடுக்க முயல்கிறார் எனப் பரவலாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.ஆனால், பத்து மலையில் மறுபடியும் தொடங்கி விட்டார்.

மக்கள் மாற்றுக்கட்சிக்கு வாக்களிக்கலாம் என்ற நிலை உருவாகும்போது- ஊழலுக்கும்,அதிகரிக்கும் குற்றச்செயல்களுக்கும்,பொதுச் சேவையின் திறமைக்குறைவுக்கும், அநியாயமான வியாபார நடைமுறைகளுக்கும், இனவாதத்துக்கும், சமய தீவிரவாதத்துக்கும் இன்ன பிறவற்றுக்கும் சரியான தீர்வுகாண முயலாமல்-உடனே பணத்தையும் இலவசங்களையும் வாரிவழங்கி நிலைமையை மாற்றப் பார்க்கிறார்.

சரவாக்டாயாக்: மலேசிய பிரதமர் என்ற முறையில் நஜிப்புக்கு ஒரே ஒரு திறமைதான் உண்டு. நமது பணத்தை எடுப்பார். அதை அங்கும் இங்கும் கொடுத்து நமக்கே தானம் செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முனைவார்.

ஸ்வைபெண்டர்: நஜிப்,மாற்றத்தைப் பற்றியெல்லாம் மறந்து விடுங்கள்.மாற்றம் ஏற்பட வேண்டுமானால் முதலில் அம்னோ மாற வேண்டும்.

இந்தியர்களையும் மற்றவர்களையும் காலங்காலமாக அச்சுறுத்தியும் ஒதுக்கியும் வைப்பதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் அம்னோ மாறுமா?

பெயரிலி: நஜிப், 23 வயதில் துணை அமைச்சர் ஆனார்.இப்போதுதான், 35 ஆண்டுகளுக்குப் பிறகு,அதுவும் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியர்கள் தம்மை நம்ப வேண்டும் என்கிறார்.

TAGS: