வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே திருமணம்: சவுதியில் புது சட்டம்

சவுதி அரேபியாவில் “குடும்பம் நடத்துவது எப்படி” என்ற வகுப்பில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இனிமேல் திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற புதிய சட்டம் ஒன்று சவுதி அரேபிய நீதித்துறை அமைச்சகம் முன்வைத்துள்ளது. இச்சட்டத்தை அனுமதிப்பதா, இல்லையா என சவுதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

சவுதி அரேபியாவில் தற்போது குடும்ப சண்டை அதிகரித்து வருகிறது. மேலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண்கள் சிலர், பெண்களின் கன்னித்தன்மை பரிசோதனை குறித்த மருத்துவ அறிக்கையை கேட்கின்றனர்.

இது போன்ற பிரச்னைகளையெல்லாம் குறைக்க திருமணம் செய்து கொள்ள போகும் தம்பதியினருக்கு திருமணத்துக்கு முன்பாக சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பத்தை நடத்துவது குறித்த மேலாண்மை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது குறித்த சட்டம் தொடர்பில் சவுதி நீதித்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. நீதித்துறை அமைச்சகத்தின் இத்திட்டத்துக்கு சமூகத்துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.