பிரதமரின் அறிவிப்பு பயனற்ற மழுப்பல்; ஜெயலலிதா சாடல்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு ஆதரவளித்து வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்தியா உள்ளது என இந்தியப் பிரதமர் செய்துள்ள அறிவிப்பை விமர்சித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமரின் அறிவிப்பில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை, அவற்றுக்காக இலங்கை அரசை இந்தியா கண்டிக்கவும் இல்லை என ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் அறிவிப்பு “மழுப்பலான, பயனில்லாத பதில்” என்று ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.

இலங்கை தமிழர் விவகாரத்தில் திமுக மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதாக கருணாநிதி அரங்கேற்றும் நாடகத்துக்கு துணைபோகும் வகையில் பிரதமர் இந்த தெளிவற்ற அறிவிப்பைச் செய்துள்ளார் என ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.