பின்லேடன் மனைவிகள் சவுதி அரேபியாவில் தங்க அனுமதி

அல்கொய்தா தீவிரவாத இயக்க தலைவர் பின்லேடன் கடந்த ஆண்டு மே 2-ந்தேதி பாகிஸ்தான் அபோதாபாத்தில் அமெரிக்க ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அவருடன் 3 மனைவிகள் மற்றும் 11 குழந்தைகள் தங்கி இருந்தனர்.

இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் அத்துமீறி நுழைந்து தங்கி இருந்ததாக கைது செய்யப்பட்டனர். பின்னர் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரையும் பாகிஸ்தானில் இருந்து வெளியேற்ற அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இவர்களை சவுதி அரேபியாவுக்கு நாடு கடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பின்லேடனின் 3 மாணவிகளும், குழந்தைகளும் தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களை சவுதி அரேபியா அரசு அங்கு தங்க அனுமதி அளித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எந்த ஒரு தீவிரவாத அமைப்புடனும் பின்லேடனின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.