மக்களுக்கு முன்னுரிமை என்பதற்குப் புதிய அர்த்தம்

“அரசாங்கம் எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் வரி விதிக்கிறது. ‘Rakyat didahulukan’ (மக்களுக்கு முன்னுரிமை) என்பதற்கு எதுவானாலும் முதலில் பாதிக்கப்படுவோர் மக்கள் என்பதுதான் புதிய பொருள்.”

 

 

 

பிரதமர்: சேவைக்கட்டண வரி அரசின் முடிவல்ல; நிறுவனங்கள் அதை மறு ஆய்வு செய்ய வேண்டும்

ஒங்: தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (டெல்கோ) பிரிபேய்ட் சேவைகளுக்கான 6% சேவை வரியை வாடிக்கையாளர்களிடம் தள்ளிவிடுவதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக். நான் கேட்கிறேன், இவர் தெரிந்துதான் பேசுகிறாரா?

இப்படிச் சொல்கின்றவர், எல்லா நிறுவனங்களிடமும் சேவை வரியை வாடிக்கையாளர்களிடம் தள்ளிவிடக்கூடாது என்று கூறிட வேண்டும். நானும் ஒரு தொழிலை நடத்தி, நான் விற்கும் பொருள்களுக்கும் வழங்கும் சேவைக்கும் அரசாங்கத்துக்குச் சேவை வரி கட்ட வேண்டும் என்கிற நிலை இருந்தால் அந்த வரியை வாடிக்கையாளர்களிடம்தான் தள்ளி விடுவேன்.

வரிகள் மக்களுக்குப் பெரும் சுமையாக இருக்கின்றன அதனால் மோட்டார் வாகன விற்பனையாளர்கள் கார்கள்மீதான வரிகள் அனைத்தையும் அவர்களே ஏற்க வேண்டும் என்று நஜிப் கேட்டுக்கொள்வாரா? வரிகள் சுமை என்றால், வரிகளை விதிக்காதீர்கள்.

இப்படி அபத்தமாக பேசிக்கொண்டிராமல், அவரது பின் அல்லக்கைகள் அரசாங்கப் பணத்தைக் கொள்ளையடிப்பதையும் விரயமாக்குவதையும் அவர் தடுத்து நிறுத்த வேண்டும். அதைச் செய்தால் மக்களுக்குச் சுமையாக விளங்கும்  வரிகளை விதிக்கும் அவசியமிருக்காது.

கண்காணிப்பாளன்: டெல்கோ நிறுவனங்கள் மீதும் சேவை வழங்கும் மற்ற நிறுவனங்கள்மீதும் 6% சேவைவரியை விதித்தது நஜிப்பின் அரசுதான். அஸ்ட்ரோ முதலிய நிறுவனங்கள் சேவை வரியை ஏற்கனவே  வாடிக்கையாளர்களின் தலையில் கட்டிவிட்டார்கள். டெல்கோ இதுவரை அந்த வரியை அதுவே ஏற்றுக்கொண்டிருந்தது. இப்போது அஸ்ட்ரோ போன்ற நிறுவனங்களைப் பின்பற்றி அதுவும் அந்த வரியைப் பொதுமக்களிடம் தள்ளிவிடுவது என்று முடிவு செய்துள்ளது.

நஜிப் பேசியதற்கு, அரசாங்கம் சேவை வரியைக் கொண்டு வந்தால் அதை நிறுவனங்களே ஏற்க வேண்டும் என்பதுதான் அர்த்தம் என்றால், அஸ்ட்ரோ உள்பட எல்லா நிறுவனங்களும் அந்த வரியை வாடிக்கையாளர்களிடம் தள்ளிவிடுவதை நிறுத்தி இதுவரை அவர்களிடம் சேவை வரி என்று வசூலித்த பணம் மொத்தத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டும்.

பெர்ட் டான்: சேவை வரி பற்றித் தெரியாமல் பிரதமர் நஜிப் எப்படி நிதி அமைச்சராகவும் இருக்கிறார்?

டெல்கோ 6% சேவை வரியை மக்கள்மீது விதிக்கக்கூடாது என்றால் சட்டத்தைத் திருத்தி அந்த வரிவிதிப்பை ரத்து செய்யுங்கள். அல்லது நிறுவனங்கள் அந்த வரியை அவைதாம் ஏற்க வேண்டும் என உத்தரவிடுங்கள்.

1M: டெல்கோ முடிவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறுவதன்வழி ஒரு ‘ஹீரோ’ வாகப் பார்க்கிறார் நஜிப். 6% சேவை வரியை விதித்தவரே அவர்தானே. வரியை விதிக்காதிருந்தால் இத்தனை தொல்லையும் இருக்காதே. மக்கள்மீது கருணை உள்ளவராக இருந்தால் 6% வரியை ரத்துச் செய்யுங்களேன்.

அசிசி கான்: வரி மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கூறும் கோட்டா பெலுட் எம்பி அப்துல் ரஹ்மான், மலேசியர்கள் போதுமான அளவு வரி செலுத்தவில்லை என்கிறாரா? ஒரு மாற்றத்துக்கு அரசு சிக்கனமாக நடந்துகொண்டால் என்ன?

உண்மை விரும்பி: கோட்டா பெலுட் எம்பி, டெல்கோ பங்குகளை வைத்திருக்கிறாரா?

பிர்பேய்ட் சேவைகளைப் பயன்படுத்துவோர் யார்? குறைந்த வருமானம் பெறுவோர், குடும்பத்தலைவிகள், பணி ஓய்வு பெற்றவர்கள். உம்மைப் போல் உட்காந்துகொண்டே கொளுத்த சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பவர்கள் அல்லர்.

பெட்ரெண்ட் ரஸ்ஸல்: மலேசியாவில் எல்லாவற்றின் விலைகளும் உயர்கின்றன. இதனால், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றார்கள்; ஏழைகளை மேலும் ஏழைகளாகின்றனர்.

சிக்கனம் தேவை என்கிறீர்கள் ஒப்புக்கொள்கிறேன். அரசாங்கமும் டாம்பீக செலவுகளைக் குறைக்க வேண்டும். பிரதமர் அவரது மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். மக்களின் பணத்தில் வெளிநாட்டுப் பயணம் செல்வதை நிறுத்த வேண்டும்.

சைனல்: ஒரு கைபேசியைப் பயன்படுத்தும் ஏழைக் குடிமகன் கூடுதல் வரி செலுத்த வேண்டும். ஆனால், ரிம24மில்லியன் வைர மோதிரம் வாங்குபவர் வரி செலுத்த வேண்டியதில்லை. இது என்ன நியாயம்? 

அனைவருக்கும் நியாயம்: அரசாங்கம் எதையும் விட்டு வைக்கவில்லை. எல்லாவற்றுக்கும் வரி விதிக்கிறது. ‘Rakyat didahulukan’ (மக்களுக்கு முன்னுரிமை) என்பதற்கு எதுவானாலும் முதலில் பாதிக்கப்படுவோர் மக்கள் என்பதுதான் புதிய பொருளா?

TAGS: