பெர்சே கூட்டுத் தலைவர் ஏ சமாட் சைட், நடக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தால் தமது சகா அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு ‘உடற்பயிற்சியை’ ( ‘butt exercises’ ) நடத்தியவர்கள் அடுத்து என்னைக் குறி வைத்தால் நான் வியப்படைய மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
“அது இழிவானது, கழிசடையான நடவடிக்கை என நான் கருதுகிறேன். அடுத்து அவர்கள் என் வீட்டுக்கு முன்னால் அதனை செய்வது முடியாத காரியமல்ல. முடியாத காரியமல்ல,” என அவர் மலேசியாகினி சந்தித்த போது சொன்னார்.
“அவரது வீட்டுக்கு முன்னால் ஒரு குழுவினர் தங்களது பின்புறத்தை ஆட்டிக் கொண்டிருந்தால் அவர் என்ன செய்வார்,” என்றும் பாக் சமாட்-டிடம் வினவப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த அவர்,” அதற்கு பதிலடி என்னிடமிருந்து வராது. பொது மக்களிடமிருந்து வரும். அதனைச் செய்யுங்கள் பார்க்கலாம்,” என்றார்.
எதிர்ப்பாளர்கள் ஏன் தங்கள் ஆத்திரத்தை அம்பிகா மீது வெளிப்படுத்துகின்றனர் உங்கள் மீது அல்ல என வினவப்பட்ட போது அந்தக் கேள்வி எதிர்ப்பாளர்களிடம் எழுப்பப்பட வேண்டும் என அந்த தேசிய இலக்கியவாதி புன்னகையுடன் சொன்னார்.
‘பேர்கர் ஆட்சேபம்’ கிரிமினல் குற்றமல்ல என போலீஸ் கூறியிருப்பது மலேசிய ஆயுதப்படைகளின் முன்னாள் வீரர்கள் சங்கத்திற்கு ஊக்கத்தை அளித்திருக்க வேண்டும் என்றும் அவர் கருதுகிறார்.
“அம்பிகா வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்வது தவறல்ல என துணைத் தேசியப் போலீஸ் படைத் தலைவர் கூறியுள்ளார். அது அவர்களுக்கு துணிச்சலைக் கொடுத்திருக்க வேண்டும். அதனால் மக்கள் மீண்டும் அதனைச் செய்கின்றனர்,” என்றார் பாக் சமாட்.
“வலிமையானவர்கள் சட்டங்களுக்கு விளக்கம் கொடுக்கின்றனர்”
கூட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பொது இடங்களில் அல்லாமல் குடியிருப்புப் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் அனுமதிக்கப்படுவது குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்றும் அவரிடம் வினவப்பட்டது.
அதற்கு அவர்: “வலிமையானவர்கள் சட்டத்திற்கு விளக்கம் கொடுப்பதே அதற்குக் காரணம்”, என்றார்.
அந்த ஆர்ப்பாட்டங்கள் “அச்சுறுத்தல் நடவடிக்கைகள்” எனக் குறிப்பிட்ட பாக் சமாட், பெர்சே-யின் வேகத்தை அவை குறைக்க முடியாது என்றார்.
புக்கிட் டமன்சாராவில் பெர்சே கூட்டுத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் வீட்டுக்கு முன்பு முன்னாள் ஆயுதப் படை அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்று இன்று காலை “உடற்பயிற்சிகளை” (‘butt exercises’) மேற்கொண்டது.
மலேசிய ஆயுதப்படைகளின் முன்னாள் வீரர்கள் சங்க (PVTM)உறுப்பினர்கள் எனத் தங்களை அழைத்துக் கொண்ட அதன் பங்கேற்பாளர்கள் “நாட்டின் பெயரைக் களங்கப்படுத்தி நாட்டின் எதிரியாக” அம்பிகா இருப்பதற்கு எதிராக ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அந்த நிகழ்வை நடத்தியதாக கூறினர்.
அப்போது அம்பிகா வெளியில் வந்து அவர்களுக்கு டின்களில் அடைக்கப்பட்ட isotonic பானத்தை வழங்கி அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
கடந்த மாதம் நிகழ்ந்த பெர்சே 3.0 பேரணியின் போது தங்களுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறிக் கொண்ட வியாபாரிகள் குழு ஒன்று மே 10ம் தேதி அம்பிகா வீட்டுக்கு முன்னால் “பேர்கர் கடையை” அமைத்து ஆட்சேபம் தெரிவித்துக் கொண்டனர்.