உங்கள் கருத்து: இதற்குப் பெயர் பிரச்சாரம்; வரலாறு அல்ல

“வரலாற்று விவரங்களை எல்லோரும் எப்போதும் பார்க்கலாம். ஆனால் அந்த விவரங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கம் அதனை விளக்குகின்றவரைப் பொறுத்தது.”

 

 

 

மகாதீர்: பிரிட்டிஷ்காரர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று நடந்து கொண்டார்கள்

புரோஅர்ட்: சுல்தான்கள் தங்கள் மாநிலங்களை நிர்வாகம் செய்ய பிரிட்டிஷாரை அழைத்தனர் என்பதே டாக்டர் மகாதீர் முகமட் சொல்வதின் சாராம்சம். அவர்களுக்கு ஆற்றல் இல்லாமல் இருந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது “விற்று விடுவதற்கு” ஈடாக பிரிட்டிஷ்காரர்கள் வழங்க முன் வந்த “வளம்”, மேலாதிக்கத்திற்காக போராடிய போட்டித் தலைவர்களுடன் தொடர்ந்து சண்டையிட்டு’க் கொண்டு ஏழ்மையில் வாழுவதை விட கவர்ச்சியாக இருந்திருக்க வேண்டும்.

உண்மையில் “அந்த அழைப்பு” அவர்கள் மீது திணிக்கப்பட்டது. என்றாலும் தன்னுடன் ஒத்துழைக்கின்றவர்களுக்கு கணிசமாக வெகுமதி வழங்க பிரிட்டிஷ்காரர்கள் தயாராக இருந்தனர். அதற்கு சுல்தான்கள் கொடுத்த விலை பிரிட்டிஷ் விருப்பங்களுக்கு இணங்குவதும் “ஆலோசகர்” அல்லது ரெசிடண்ட் ஒருவரை ஏற்றுக் கொள்வதாகும்.

இணக்கமாக நடந்து கொள்ளாத சுல்தான் வெளியேற்றப்பட்டார். பிரிட்டிஷ் உத்தரவுகளுக்கு இணங்கக் கூடிய புதிய “சுல்தான்” கண்டு பிடிக்கப்பட்டார். பிரிட்டிஷார் விரும்பிய காலனித்துவ முறை இதுவே. அதற்கு “மறைமுகமான” ஆட்சி எனப் பெயர்.

மகாதீர் சொன்னதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகிறது-  அவர், சுல்தான்களை உண்மையான துரோகிகளாகக் கருதுகின்றார்.

மெராந்தி கெப்போங்: மகாதீர் உண்மையில் வரலாற்றுப் பிற்போக்குவாதி. அன்றைய மலாயா பிரிட்டிஷ் மலாயா என்பதை அவர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்.

மூன்று பிரிட்டிஷ் ஹைகமிஷனர்கள் இருந்துள்ளனர்- சர் ஹென்ரி கேர்னி ( பிரேசர் மலையில் கம்யூனிஸ்ட்களினால் கொல்லப்பட்டார்), சர் ஜெரார்ல்ட் டெம்ப்ளர், மெர்தேகாவுக்கு முன்னும் பின்னரும் சர் டொனால்ட் மெக்கிலவரி. அவர்கள் எலிசபத் அரசியாரின் பேராளர்கள்.

பிரிட்டிஷ் இந்தியா தவிர மற்ற எல்லா பிரிட்டிஷ் சாம்ராஜ்யப் பகுதிகளில் அத்தகைய நியமனங்கள் பொதுவானவை. இந்தியாவுக்கு வைஸ்ராய் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட்பாட்டன் பிரபு ஆவார்.

ஆகவே பிரிட்டிஷ் மலாயா காலனித்துவ ஆட்சியில் இருந்தது இல்லை எனக் கூறுவது அதிகப்படியானது. மலாயா வரலாற்றை வேண்டுமென்றே தெரியாதது போல் நடிப்பதாகும்.

கறுப்பு மம்பா: பிரிட்டிஷாரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை நாம் கொண்டாடுமாறு கடந்த 54 ஆண்டுகளாக அம்னோ செய்து வருகிறது. ஆனால் இப்போது மகாதீர் சொல்கிறார்: பிரிட்டிஷ்காரர்கள் மலாயாவை “பாதுகாப்புக்கு உட்பட்ட பிரதேசமாக” நிர்வாகம் செய்தார்கள் என்று.

டாக்டர் மகாதீர் சொல்வதைப் பார்த்தால் நாம் காலனித்துவ ஆட்சிக்கு உட்படாத வேளையில் அவர்  தமது நிர்வாகத்தில் 22 ஆண்டுகளுக்கு பொய் கூறி நம்மை மெர்தேகாவைக் கொண்டாடுமாறு செய்து வந்துள்ளார்.

அடையாளம் இல்லாதவன்: தங்களுக்கு ஆலோசனை கூற பிரிட்டிஷ்காரர்களை ஆட்சியாளர்கள் “அழைத்தனர்” என்று சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மலாய் மாநிலங்களின் விவகாரங்களில் பிரிட்டிஷ்காரர்கள் தலையிட்ட போது அவர்களை அழைக்குமாறு சுல்தான்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

ரெசிடண்ட்களின் “அறிவுரைக்கு” இணங்க சுல்தான்கள் மாநிலச் சட்டங்களை நிறைவேற்றினர். மலாய் மாநிலங்களின் கூட்டரசு கவர்னர் “அறிவுரைக்கு” இணங்க சட்டங்கள் இயற்றப்பட்டன.

வரலாற்று விவரங்களை எல்லோரும் எப்போதும் பார்க்கலாம். ஆனால் அந்த விவரங்களுக்கு கொடுக்கப்படும் விளக்கம் அதனை விளக்குகின்றவரைப் பொறுத்தது.

அதனை தேசிய நோக்கம் என ” சொல்லக் கூடாது ” அது பிரச்சாரம். வரலாறு அல்ல.

TAGS: