“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்க துணைத் தூதரின் கருத்தால் சர்ச்சை

இந்தியாவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இந்தியாவுக்கான அமெரிக்க துணைத் தூதுவர் மொறீன் சாவோ “தமிழர்கள் கறுப்பானவர்கள், அழுக்கானவர்கள்” என்று  தெரிவித்துள்ள கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நிகழ்வில் அமெரிக்க தூதர் தெரிவித்ததாவது; “20 ஆண்டுகளுக்கு முன்னர் கலாசாரம் மற்றும் மொழி பற்றி அறிந்து கொள்ள நான் இந்தியாவுக்கு வந்தேன். பின்னர் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்குச் சென்றேன். அந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால், 72 மணி நேரம் ஆகியும் நான் தொடருந்து ஒரிசா போய்ச் சேரவில்லை. இதனால் எனது சருமம் தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும் மாறி விட்டது” என்றார்.

இன வெறி கொண்ட இந்த பேச்சு மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து ஒட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது. எனவே இந்தக் கருத்தை மீட்டுக்கொண்டு தமிழர்களைப் பற்றி இத்தகையக் கருத்து தெரிவித்ததற்காக மொறீன் சாவோ மன்னிப்பு கேட்கவேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே, இந்தக் கருத்து பொருத்தமற்றது என்றும் இதற்காக துணைத் தூதுவர் வருந்துவதாகவும் அமெரிக்கத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.