மாட் சாபு பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

புக்கிட் கெப்போங் சம்பவம் குறித்த அதிகாரத்துவ தகவல்களுக்குச் சவால் விடுத்ததற்காக நீதிமன்ற அழைப்பாணையை பெற்றுக் கொள்ளும் பொருட்டு நேற்று பினாங்கு போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

மாட் சாபு என்றும் அழைக்கப்படும் முகமட்டுக்கு எதிராக கைது ஆணையை போலீசார் வெளியிட்டுள்ளதாக அந்த மாநில போலீஸ் படைத் தலைவர் அயூப் யாக்கோப் கூறினார்.

பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த அவர் நேற்றிரவு மணி 8.30 வாக்கில் போலீஸ் தலைமையகத்துக்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மாட் சாபு சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டு, அவரது வாக்குமூலத்தைப் போலீசார் பதிவு செய்த பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 21ம் தேதி தாசெக் குளுகோரில் மாட் சாபு நிகழ்த்திய சர்ச்சைக்குரிய உரையைத் தொடர்ந்து அவருக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது குற்றம் சாட்டப்படும் என அயூப் சொன்னார்.

“மாட் சாபு அறிக்கை மீது வருத்தம் அடைந்துள்ள போலீசாரின் வாரிசுகள் அந்தப் புகார்களைக் கொடுத்துள்ளனர்”, என அவர் நிருபர்களிடம் கூறினார்.

“சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்”, என அவர் மேலும் சொன்னார்.

தவறான தோற்றத்தை தரக் கூடிய வகையில் அறிக்கைகளை வெளியிட்டதாக குற்றவியல் சட்டத்தின் 505வது பிரிவின் கீழ் மாட் சாபு மீது குற்றம் சுமத்தப்படும்.

கிரிமினல் அவதூறுக்காக 500வது பிரிவின் கீழும் அவர் மீது மாற்றுக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று அவரது வழக்குரைஞரான ஹனிப்பா மைதின் கூறினார்.

இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை

மாட் சாபு இன்று காலை 9 மணிக்கு பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

தமது கட்சிக்காரர் குற்றமற்றவர் என்றும் அதிகாரிகள் தவறான நபர் மீது குற்றம் சாட்டுகின்றனர் என்றும் ஹனிப்பா சொன்னார்.

“அவர்கள் உத்துசான் மலேசியா மீது குற்றம் சாட்ட வேண்டும்,” என அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

பினாங்கில் உள்ள தாசெக் குளுகோரில் ஆகஸ்ட் 21ம் தேதி ஆற்றிய உரைக்காக மாட் சாபுவைக் கண்டிக்கும் பல செய்திகளை ஆகஸ்ட் 27ம் தேதி உத்துசான் மலேசியா வெளியிட்டிருந்தது.

1950ம் ஆண்டு புக்கிட் செப்போங் போலீஸ் நிலையத்தை தாக்கிய கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களை மாட் சாபு பாராட்டிப் பேசியதாக அந்தச் செய்திகள் குறிப்பிட்டன. அந்தச் சம்பவத்தில் 26 பேர் கொல்லப்பட்டனர்

கிளர்ச்சிக்காரர்களை வீரர்களைப் போல (ஹீரோக்கள்) நடத்தியதாகவும் உத்துசான் மேலும் குற்றம் சாட்டியது.

ஆனால் உத்துசான் தமது சொற்களை திரித்து வெளியிட்டுள்ளதாக மாட் சாபு கூறிக் கொண்டுள்ளார். அதற்காக அம்னோவுக்கு சொந்தமான அந்த ஏட்டின் மீதும் அவர் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

TAGS: