அன்வார்: நஜிப், அது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல

நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென தாம் அனுப்பிய சப்பீனாவை தள்ளுபடி செய்வதற்கு நஜிப் அப்துல் ரசாக விண்ணப்பித்துக் கொண்டிருப்பது “ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” என்று அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார்.

தோற்றத்தை சரிப்படுத்த பிரதமர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் அது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

சப்பீனா அனுப்பப்பட்டால் குதப்புணர்ச்சி வழக்கு ll சாட்சியமளிக்கத் தாம் தயாராக இருப்பதாகவும் நீதிமன்றத்தில் அன்வாரைச் சந்திக்க தாம் அஞ்சவில்லை என்றும் நஜிப் ஏற்கனவே கூறியிருந்தார்.

“இப்போது அவர் அந்த சப்பீனாவைத் தள்ளி வைப்பதற்கு விண்ணப்பத்தை சமர்பிக்கிறார்…ஏன் ஒதுங்குகிறார்?” என அன்வார் வினவினார்.

தமது முன்னாள் உதவியாளரான முகமட் சைபுல் புஹாரி அஸ்லான் தொடுத்த புகாரின் அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக அன்வார் எதிர்வாதம் செய்கிறார்.

“நஜிப்பை  அவரது இல்லத்தில் சைபுல் சந்தித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.  அவர் இப்போது ஒதுங்க முயலுகிறார். இதனால் நிச்சயம் விவகாரங்கள் தாமதமடையும். நாங்கள் அதனைக் கவனிக்க வேண்டும். நஜிப்பின் அத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல”, என அவர் புன்முறுவலுடன் கூறினார்.

1998ம் ஆண்டு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பயன்படுத்திய அதே வழியை நஜிப்பும்  நாடியுள்ளார்.

“அந்தச் சந்திப்பு தொடர்பாக நஜிப் பதில் சொல்ல வேண்டும்- அந்தச் சந்திப்பு நிகழ்ந்ததைத் தொடக்கத்தில் மறுத்த நஜிப் பின்னர் சைபுலை சந்தித்ததை ஒப்புக் கொண்டார்.

நஜிப் நடவடிக்கை “ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” என்று பிகேஆர் தலைவரும் அன்வார் மனைவியுமான டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயிலும் வருணித்தார்.

பேஸ் புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இளைஞர்களுடன் தாம் தொடர்பு கொள்வது பற்றி 58 வயதான நஜிப் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று மூன்று வானொலி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டார். அப்போது அவர் தாம் மன இறுக்கம் இல்லாத சூழ்நிலையில் இருப்பதாகக் காட்டிக் கொண்டார்.

கடந்த சனிக்கிழமை அவர் சுவாராகாமி என்னும் இசை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். மகத்தானது என்றும்  செம்போய் என்றும் அவர் அந்த நிகழ்வை நேற்று வருணித்தார். செம்போய் என்னும் மலாய் சொல்லுக்கு சுலபமானது, சாந்தமானது எனப் பொருள்.