பினாங்கு கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் கொண்டுவருவது அன்வாருக்கு சம்மதமே

பினாங்கு அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித்தாவுவதைத் தடுக்கச் சட்டம் கொண்டுவர எண்ணியிருப்பதில் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு ஆட்சேபணை இல்லை.

சட்டமன்றத்தின் நவம்பர் மாதக் கூட்டத்தில் அச்சட்டம் கொண்டுவர முடிவு செய்திருப்பதை பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தம்மிடம் நேரடியாக தெரிவித்திருக்கிறார் என அன்வார் கூறினார்.

“நேற்று முதலமைச்சர் அதை எனக்குத் தெரிவித்தார்.அதில் எனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை”, என்றாரவர். இன்று, ஷா ஆலமில் சிலாங்கூர் அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள வந்த அவரிடம் அது பற்றி வினவப்பட்டது.

ஆனால்,அவ்விசயத்தில் சிலாங்கூர் அரசு பினாங்கை பின்பற்றுமா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ரோட்ஸியா இஸ்மாயில், ரோனி லியு, ஹலிமா அலி ஆகியோர் கூறினர்.

“கட்சித்தாவல்-தடுப்புச் சட்டம் பற்றி (சிலாங்கூர்) இன்னும் விவாதிக்கவில்லை”, என ரோட்ஸியா(இடம்) தெரிவித்தார்.