பெருகிவரும் ஹிண்ட்ராப் ஆதரவை குலைத்து, மக்களைக் குழப்பும் அம்னோ கைக்கூலிகள்

-ஜெ.விஜயலிங்கம், பேராக் மாநில செயலாளர், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி.
28 ஆகஸ்ட் 2012.  

மலேசிய ஏழை இந்தியர்களின் உரிமைக் குரலான  ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தின் முழக்கத்திற்கு, நாடு முழுவதிலுமிருந்து மக்களிடையே மீண்டும் பலத்த ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வருகிறது.

ஹிண்ட்ராப் மக்கள் சக்தி  இயக்கத்தின் தலைவர் பொ.வேதமூர்த்தி லண்டனிலிருந்து நாடு திரும்பிய  பின்னர் நாடு முழுவதும் தமது சூறாவளி பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் செல்லும் இடங்களிலெல்லாம் மக்கள் திரளாக ஒன்று கூடி அவரின் அறிவுப்பூர்வமான உரைகளுக்கு  பெருத்த ஆதரவை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை பல்லாயிரகணக்கானோர் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி  இயக்கத்தின் தூய்மையான போராட்டத்தின் அர்த்தத்தை அவரின் உரைகளை செவிமடுத்த பின்னர் உணர தொடங்கியுள்ளனர்.

மக்களிடேய  ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தின் செல்வாக்கு மீண்டும் தலைதூக்குவதை பெரும்பாலான அரசியல் வாதிகளால் ஜீரணிக்கமுடியவில்லை. குறிப்பாக  அம்னோவின் தயவுக்காகவும்,  சன்மானத்திற்காகவும் தவம் கிடந்து வயிற்று பிழைப்புக்காக அரசியல் நடத்தும் சில சுயநல மேதாவிகளால், ஹிண்ட்ராப் மக்கள் சக்தியின்  எழுச்சியை கண்டு இருப்புக்கொள்ள முடியவில்லை.

ஏழை இந்தியர்களுக்காக ஆக்ககரமாக எதுவும் செய்ய முடியாத, செய்யத் தெரியாத இவர்களின் கைவந்த ஒரே கலை மக்களை குழுப்புவதுதான். எனவே ஹிண்ட்ராப் மக்கள் சக்தி  பெயரைச் சொல்லி மீண்டும் தெளிவு பெற்றுவரும்   மக்களை குழப்பி திசை திருப்பும் வேலையில் இவர்கள் களம் இறங்குவார்கள் என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான்.

நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே  புக்கிட் கந்தாங் எனும் இடத்தில்,  கெஅடிலான் கட்சி ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் கலந்துகொண்ட அன்வாரிடம்,  தம்மை பேராக் மாநில ஹிண்ட்ராப்  மக்கள் சக்தியின் ஒருங்கிணைப்பாளர் என்று சுய தம்பட்டம் அடித்து கொண்டுள்ளார்  ஹிண்ட்ராப் அமைப்பிலிருந்து வெளியேறி அம்னோவுக்கு சாதகமாக செயல்பட  மக்கள் சக்தி என்ற அரசியல் கட்சியை உருவாக்கிய அ.வேதமூர்த்தி.

ஹிண்ட்ராப் தலைவர் பொ. வேதமூர்த்தியின் பெயரும் இவரின் பெயரும் ஒன்றாக இருப்பதால் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தின்  பெயரைப் பயன்படுத்தி ஏழை இந்தியர்களை குழப்பி அதில் குளிர்காய முயன்றிருக்கும் இவரின் அப்பட்டமான செயலை மக்கள் தெளிவாக புரிந்தது கொள்ள வேண்டும்.

தனேந்திரனாலும், அ. வேதமூர்த்தியாலும் துவங்கப்பட்ட  மக்கள் சக்தி என்ற அரசியல் கட்சிக்கும், பொ.வேதமூர்த்தியின் தலைமையில் இயங்கும் மக்கள் இயக்கம், ஹிண்ட்ராப் மக்கள் சக்தி அமைப்புக்கும், துளி அளவும் சம்பந்தம் இல்லை என்பதை இங்கே தெள்ளத் தெளிவாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும்  மக்களை குழப்பும் நோக்கத்துடன் செயல் படும் மக்கள் சக்தி அரசியல் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுடனோ, தற்கால உறுப்பினர்களுடனோ பக்காத்தான் ராக்யாட் அரசியல் தலைவர்கள் உறுவுகளை வளர்த்துக்கொள்வதன் மூலம், நிகழவிருக்கும்  பின்விளைவுகளுக்கு ஹிண்ட்ராப் மக்கள் சக்தியை பின்னாளில் குறைகூற வேண்டாம் என்றும் நாங்கள் முன்கூட்டியே தெரிவித்துகொள்கிறோம்.

ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தின் ஒரே தலைவர் பொ.வேதமூர்த்தி மட்டுமே. அவரின் அறிவுரையோடும்  அனுமதியோடும்  நடைபெறும் நிகழ்வுகளும், அறிவிப்புகளும் மட்டுமே உண்மையான ஹிண்ட்ராப் மக்கள் சக்தி  போராட்டத்தின் வெளிப்பாடு  என்பதை மக்கள் உணர வேண்டும். நம் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் ஹிண்ட்ராப் மக்கள் சக்தி இயக்கத்தை கூறு போட்டு குழப்பும் குதற்கவாதிகளின் சூழ்ச்சிகளில் நாம் மீண்டும் சிக்காமல் இருப்போம்.

 

TAGS: