‘அமைச்சின் ஆணையின்றி புத்தகங்களைக் ஜாவி கைப்பற்றலாம்’

ஜாவி எனப்படும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய விவகாரத்துறை இஸ்லாம் மீதான சர்ச்சைக்குரிய புத்தகங்களை, அவற்றை உள்துறை அமைச்சு தடை செய்யாவிட்டாலும் கூட பறிமுதல் செய்ய முடியும்.

கனடாவைச் சேர்ந்த இர்ஷாட் மாஞ்சி எழுதிய புத்தகத்தை ஜாவி பறிமுதல் செய்தது தொடர்பில் பார்டர்ஸ் புத்தகக் கடை நீதித் துறை மறு ஆய்வு கோரி சமர்பித்துள்ள விண்ணப்பம் மீது அளித்துள்ள பதிலில் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது, உள்துறை அமைச்சருடைய அதிகாரத்தை ஜாவி பிடுங்கிக் கொண்டுள்ளதற்கு ஒப்பாகும் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

அந்த அமைச்சின் வெளியீட்டு, திருக்குர் ஆன் பிரிவின் உத்தரவு இல்லாமல் ஜாவி இனிமேல் எந்தப் புத்தகத்தையும் பறிமுதல் செய்ய முடியும்.

நீதிமன்றத்துக்கு அனுப்பியுள்ள தமது பதிலில் உள்துறை அமைச்சர் அவ்வாறு வலியுறுத்தியிருப்பது ஜாவியின் அதிகார அத்துமீறல்களைக் கண்காணிக்கும் பணியை ஆற்றுவதற்குப் பதில் அமைச்சும் ஜாவியும் ஒன்றை ஒன்று பாதுகாப்பதற்காக இணங்கிப் போகக் கூடும்.

அந்தப் புத்தகம் பறிமுதல் செய்யப்பட்ட நாளன்று தடை உத்தரவு ஏதும் இல்லை என்றாலும் ஜாவி அதனைச் செய்வதற்கு அதிகாரத்தைப் பெற்றுள்ளது. காரணம் ஷாரியா குற்றங்கள் (கூட்டரசுப் பிரதேசம்) சட்டத்தின் 13வது பிரிவை அந்த மீறியிருப்பதாக செப்டம்பர் 5ம் தேதியிடப்பட்ட அபிடவிட் பதிலில் ஹிஷாமுடின் குறிப்பிட்டுள்ளார்.

“பொருத்தமான சட்டங்களின் கீழ் அமைச்சின் ஆணையின்றி ஜாவி பறிமுதல் செய்யலாம்,” என அவர் தெரிவித்தார்.

பார்டர்ஸ் புத்தகக் கடையை நடத்தி வரும் Berjaya Books Sdn Bhd, அதன் துணை தலைமை நிர்வாகி ஸ்டீபன் பங், கார்டன்ஸ் மால் கடை நிர்வாகி நிக் ராய்னா நிக் அப்துல் அஜிஸ் ஆகியோர் சமர்பித்த நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பத்துக்குப் பதில் அளிக்குமாறு உள்துறை அமைச்சருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகத்தை விநியோகம் செய்ததாக ஜுன் மாதம் ஷாரியா நீதிமன்றத்தில் நிக் ராய்னா மீது குற்றம் சாட்டப்பட்டது.

பெர்ஜெயா புக்ஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து ஜாவி, உள்துறை அமைச்சு, பிரதமர் துறையில் இஸ்லாமிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டது.

Allah, Liberty and Love என்னும் தலைப்பைக் கொண்ட அந்தப் புத்தகத்தை கார்டன்ஸ் மால் பேரங்காடியில் மே 23ம் தேதி ஜாவி பறிமுதல் செய்தது. அதற்கு ஆறு நாட்களுக்குப் பின்னர் அதாவது மே 29ம் தேதி உள்துறை அமைச்சு அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது.

நீதித்துறை மறு ஆய்வுக்கான தமது விண்ணப்பத்தில் வெளியீடுகள், வெளியீடுகள் கட்டுப்பாடு ஆகியவை தொடர்பான விஷயங்கள் உள்துறை அமைச்சின் கீழ் வருவதாகவும் ஜாவியிடம் அல்ல என்றும் பங் குறிப்பிட்டிருந்தார்.