சிட்னியில் லைனாஸ் தலைமையகத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்

ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்கள் சிட்னியில் லைனாஸ் கார்ப்பரேசன் தலைமையகம்முன் ஒன்றுகூடி குவாந்தான், கெபெங்கில் லைனாஸ் ஆலை செயல்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அக்கண்டனக் கூட்டம் மலேசிய நேரப்படி காலை 10.30க்கு(சிட்னி நேரம் பகல் மணி 22.30) நடந்தது என ஆஸ்திரேலியாவின் புவி நண்பர்கள் அமைப்பு கூறியது.

ஆஸ்திரேலியாவின் மவுண்ட் வெல்ட்-இலிருந்து கதிரியக்கத் தன்மை வாய்ந்த மண்ணை குவாந்தான் ஆலைக்கு ஏற்றுமதி செய்யும் லைனாஸ் திட்டத்தைக் கண்டிக்கவே அக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக அந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான டல்லி மெக்கிண்டயர் தெரிவித்தார்.

அந்நிறுவனம் விருப்பமில்லாத ஒரு இடத்துக்கு வலுக்கட்டாயமாக அத்திட்டத்தைக் கொண்டுசெல்லக்கூடாது என்றாரவர்.

“மலேசியாவில் லைனாஸுக்கு எதிராக மலேசிய வரலாற்றில்  இதுவரை நடைபெற்றிராத அளவுக்கு மிகப் பெரிய சுற்றுச்சூழல் இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.லைனாஸ் நச்சுத்தன்மை மிக்க பொருளை ஏற்றுமதி செய்வதைத் தடுப்பதில் ஆஸ்திரேலிய சமூக ஆர்வலர்களும் மலேசியர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்”, என்றாரவர்.

“லைனாஸ் ஆண்டுதோறும் 22,000டன் அரிய மண்ணை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.இதனால், காண்டாகாடுகள் நிறைந்த கடலோரப்பகுதியின் சூழலமைப்புப் பாதிக்கப்படும் அப்பகுதிவாழ் மக்களின் பிழைப்பும் பாதிக்கப்படும்.

“அந்த ஆலைக்கு 30கிமீ சுற்றுவட்டத்தில் 700,000 மக்கள் வாழ்கிறார்கள்.

“சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதன் தொடர்பில் அம்மக்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை, சுற்றுசூழல் பாதிப்பு மீது முறையான ஆய்வும்  மேற்கொள்ளப்படவில்லை”, என்று மெக்கிண்டயர் கூறினார்.

கடந்த வாரம், அந்நிறுவனத்துக்குத் தற்காலிக உரிமம்(டிஓஎல்) வழங்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றபோது அதில் மேற்கு ஆஸ்திரேலியாவின் பசுமை சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருவரும் கலந்துகொண்டனர்.

லைன் மெக்லேரன், ரோபின் சேப்பல் ஆகிய அவ்விருவரும், அவ்விவகாரத்தில் ஆஸ்திரேலிய அரசாங்கம் “பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை” எனச் சாடினர்.

TAGS: