பெட்ரோனாஸ் விளம்பரம் தீபாவளி உணர்வை வெளிப்படுத்தத் தவறி விட்டது

உங்கள் கருத்து: ‘யாரோ ஒருவர் அடுத்த காங்னாம் பாணி ஆட்டத்தை வழங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது வேலை மிக மோசமானது’

பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரம் கண்டிக்கப்படுகின்றது

சின்ன அரக்கன்: கடந்த காலத்தில் பெட்ரோனாஸ் பல நல்ல தீபாவளி விளம்பரங்களைத் தயாரித்துள்ளதை நாம் பாராட்ட வேண்டும். ஆனால் இந்த முறை அது நல்ல அர்த்தமுள்ள விளம்பரத்தை வழங்க முயற்சி செய்யவில்லை என்பதே உண்மை.

வளமான இந்தியப் பண்பாட்டையும் தீபாவளிக் கொண்டாட்டங்களைச் சூழ்ந்துள்ள பாரம்பரியத்தையும் அது எந்த  வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்பதும் உண்மையே. தயாரிப்புக் குழுவினர் ‘டப்பாங் குத்துவை’ காட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தியதற்குப் பதில் பாரம்பரிய, கிராமத்திய, நவீன நடனங்களைக் கலவையைக் காட்டியிருக்கலாம்.

அவ்வாறு செய்திருந்தால் அந்த விளம்பரம் இன்னும் துடிப்பு மிக்கதாக இருந்திருக்கும். வளமான பல இந்திய நடனங்களும் காட்டப்பட்டிருக்கும்.

பெட்ரோனாஸ் வெளியிட்ட தீபாவளி விளம்பரம் நாம் அதிக உணர்ச்சி வயப்பட வேண்டியதில்லை.  மலேசியர்கள் கொண்டாடும் மற்ற பெரு நாட்களைப் போன்று கவலைகளையும் வெறுப்புக்களையும் ஆத்திரத்தையும் மறப்பதற்கான நாள் ஆகும். மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் நாம் அன்றைய தினம் இருக்க வேண்டும்.

கர்மா: இது மிகவும் பரிதாபமானது. சில காலத்துக்கு முன்பு சீனப் புத்தாண்டு விருந்தை ஏற்பாடு செய்த சீனர் அல்லாத ஒருவர் வெள்ளை நிற கடித உறைகளில் பணத்தைக் கொடுத்தார். வெள்ளை நிற கடித உறை என்பது ஈமச் சடங்குகளின் போது பயன்படுத்தப்படுவதாகும்.உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத சிலர் முக்கியமான இந்திய பண்டிகையிலும் அதனையே  இப்போதும் செய்துள்ளனர்.

அண்மையில் அதே சிலர் இன்னும் திரைக்கு வராத திரைப்படம் ஒன்றில் 1969ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மாநில அரசுக் கொடிக் கம்பத்தின் கீழ் அரசியல்வாதி ஒருவர் சிறுநீர் கழித்ததாக பொய்க் குற்றசாட்டை சுமத்தினர்.

பினாங்கிலும் அண்மையில் சரவாக்கிலும் கிறிஸ்துவச் சதி எனக் கூறப்பட்ட பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை நாம் செவிமடுத்தோம். அந்த மக்களிடம் என்ன கோளாறு ? ஏதாவது மறைமுக நோக்கம் உண்டா ?

பெரிய கரடி: யாரோ ஒருவர் அடுத்த காங்னாம் பாணி ஆட்டத்தை வழங்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரது வேலை மிக மோசமானது. அதன் நோக்கம் எதுவாக இருந்தாலும் அது மனத்தைப் புண்படுத்துவதாக உள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த எந்த இந்தியரும் தீபாவளி தினத்தன்று சாலைகளில் தலையை ஆட்டிக் கொண்டு நடனமாடுவதையும் டப்பாங் குத்து பாடலைப் பாடுவதையும் நான் பார்த்தது இல்லை.

பெட்ரோனாஸ் விளம்பரங்கள் நமது உள்ளங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளன. குடும்பப் பண்புகளை பிரதிபலிக்கும் விளம்பரங்களைக் காணவே நான் விரும்புகிறேன். நமது பெற்றோர்கள், மூத்தவர்கள் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்கவும் நமக்கு கிடைத்துள்ள நன்மைகளுக்கு நன்றி கூறவும் வாழ்க்கையைக் கொண்டாடவும் வேண்டிய நேரம் அது.

ஆர்கேஆர்: இந்திய சமூகம் இப்படித் தான் பார்க்கப்படுகின்றது- சாலைகளில் காணப்படுகின்ற நாகரீகமற்ற மக்கள். முடி திருத்துவோராக மட்டும் வேலை செய்யத் தகுதி உடையவர்கள். தொழில் நிபுணத்துவம் பெற்ற இந்தியர்களும் இருப்பதைக் காண யாருமே விரும்பவில்லை.

பல இந்திய வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், தொழில்முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் இங்கு உள்ளனர்.

ஏன் ‘தெருக் கோமாளிகள்’ மட்டும் அதில் காட்டப்பட்டுள்ளனர். அந்த சமூகம் மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருக்கிறது.

டாக்: பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரம் எந்த வகையிலும் தீபாவளி மகிழ்ச்சியைக் கொண்டு வரவில்லை. வரும் பொதுத் தேர்தலில் மஇகா-வின் அஸ்தமனத்தை அந்த ‘டப்பாங்குத்து’ ஒரு வேளை குறிக்கலாம்.

கடாரம்: நான் எந்த தீபாவளிச் செய்தியையும் காணவில்லை. அவர்கள் அங்கும் இங்கும் ஒடிக் கொண்டும் குதித்துக் கொண்டும் இருக்கின்றனர். பெட்ரோனாஸிடமிருந்து நான் அதனை எதிர்பார்க்கவில்லை.

கொதிக்கும் மண்: சக மலேசியர்களுடைய பண்பாடுகளையும் பாராம்பரியத்தையும் புரிந்து கொள்ளாத மேலாதிக்க உணர்வுகளைக் கொண்டவர்களுடைய படைப்பு அதுவாகும்

நம்பிக்கையற்ற அரசாங்கம்: யாஸ்மின் அகமட், உங்களையும் உங்கள் விவேகத்தையும் நினைத்து நாங்கள் ஏங்குகிறோம். நடப்புத் தயாரிப்புக் குழுவுக்கு அந்த விவேகத்தில் பாதி கூட இல்லை.

 

TAGS: