இலண்டன் காவல்துறை அவசரத் தேவை பிரிவில் தமிழுக்கு இடம்!

இலண்டன்: இலண்டனின் பிரபலமான பத்து மொழிகளில் நமது அன்னைத் தமிழுக்கும் இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் பெங்காலி, பஞ்சாபி ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.

இந்த தகவலை இலண்டன் காவல்துறை வெளியிட்டுள்ளது. அங்கு அவசர தேவைக்காக காவல்துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பவர்களில் நாள்தோறும் கிட்டத்தட்ட 8 ஆயிரம் பேரும், சாதாரண அழைப்புகளில் 12 ஆயிரம் பேரும் தமிழில் பேசுகிறார்களாம்.

ஆங்கிலம் அல்லாத பிற மொழிகள் வரிசையில் பிரபலமான மொழிகளாக பத்து மொழிகளை இலண்டன் காவல்துறை வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் லண்டன் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பத்து பிரபல மொழிகளாக தமிழ், பிரெஞ்சு, ரோமன், பஞ்சாபி, துருக்கி, பெங்காலி, ஸ்பானிஷ், சோமாலி, போலிஷ், போர்ச்சுகீஸ் ஆகிய மொழிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் இந்திக்கு இடம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இலண்டன் வாழ் பொதுமக்கள் தங்களது அவசரத் தேவைக்கு எந்த மொழியில் வேண்டுமானாலும் தொலைபேசி மூலம் அழைக்கலாம் எனஈலண்டன் காவல்துறை அண்மையில் அறிவித்திருந்தது. இதன் பிறகுதான் அதிக பிரபலமான மொழிகள் எவை என்பதை காவல்துறை உணர்ந்தது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரிட்டனில் வாழும் தமிழர்களின் மொழி பயன்பாடு காரணமாக தமிழ்மொழி பயன்பாடு 10 இடங்களுக்குள் உள்ளதாக தகவல்கள் லண்டக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலம் தவிர்த்த வேறு மொழிகளில் யாராவது பேசினால் உடனடியாக அதை மொழி பெயர்த்துச் சொல்லும் வசதியை இலண்டன் காவல்துறை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இலண்டன் காவல்துறைக்கான தொலைபேசி அழைப்புப் பிரிவு அதிகாரி ஹாரிங்டன் கூறுகையில், ஆங்கிலம் உங்களது தாய் மொழியாக இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை, நீங்கள் எந்த நேரத்திலும் எங்களை அழைக்கலாம். நீங்கள் பேசும் மொழியில் உடனுக்குடன் மொழிபெயர்த்துக் கூறும் வசதியை நாங்கள் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட மொழிக்குரிய மொழிபெயர்ப்பாளர் 24 மணி நேரம் தயாராக இருப்பார் என்றார்.

பிரிட்டனில் இப்படி வேற்று மொழிகளுக்கு மரியாதை தருகிறார்கள். ஆனால் நமது நாட்டு அரசுத் துறைகளில் நமது தாய்மொழியில் பேச முடியாத அவல நிலை!