சிலாங்கூர் ஏழை மாணவர்களுக்கு இலவச தொழிற்கல்வி பெற வாய்ப்பு

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், ஜனவரி4, 2013.

சிலாங்கூர் மாநில அரசின் உதவியில் 2013 ஆம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வி கற்க விரும்பும் ஏழை மாணவர்கள் இப்பொழுதே பதிந்து கொள்ளலாம்.

இப்பொழுது பதிவு நடந்து கொண்டிருப்பதால் மாணவர்கள் இவ்வாய்ப்பை நன்கு பயன் படுத்திக் கொள்ள முந்த வேண்டும்.

xavier3முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இது போன்ற பயிற்சிகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பை ஆண்டுக்கு நூறு இந்திய மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசின் தோட்ட உப குழுவின் வழி வழங்கி வருகின்றோம். இதற்காக மாநில அரசு ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்து வருகிறது.

மாணவர்களுக்கு வாகனம் பழுதுபார்ப்பு, மின்சாரத் தொழில்நுட்பம், வாகன குளிர்சாதனத் தொழில்நுட்பம், குளிர்சாதனப் பெட்டி செப்பனிடுதல், மின்னியல் தொழில்நுட்பம், கணினி தொழில்நுட்பம், கணினி கிராபிக்டிசைன் வரைபடத் தொழில்நுட்பம், தையல், முக அலங்காரம் போன்ற பல துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அத்துறைகளில் பயிற்சி பெற்றவர்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே இன்பெனஸ் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியான மாணவர்களும் எனது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். ஒரு மாணவருக்குக் கல்வியில் முன்னேற ஆர்வமும் அக்கறையுமே முக்கிய தேவை.

இந்தப் பயிற்சி கோலசிலாங்கூரிலுள்ள இன்பெனஸ் காலேஜில் நடைபெறுகிறது. இதில் சேர்ந்து பயனடைய 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான அடிப்படை கல்வி தகுதி எஸ்பிஎம் என்ற போதிலும் தேசிய மொழியில் ஒருவருக்கு உள்ள வல்லமையைக் கொண்டு நேர்முகத் தேர்வில் தீர்மானிக்கப்படும்.

கடந்த ஆண்டு எஸ்பிஎம் (SPM) தேர்வு எழுதி, தேர்வு முடிவுகளுக்குக் காத்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் பயிற்சியை இடையில் கைவிட்டு வெளியேறுவது அனுமதிக்கப்படாது. இது ஆர்வமுள்ள மற்ற மாணவர்களின் வாய்ப்பை விரயமாக்குவதாகும்.

இதன் முக்கியக் கட்டுப்பாடாக இருப்பது சிலாங்கூர் மாநிலத்தில் வசிப்போரின் பிள்ளைகளுக்கு முதலிடம் வழங்கப்படுவதுடன், தொழில் துறைகளில் சேர்ந்து தொழில்நுட்ப வல்லுநராக விரும்புவோருக்கு முதலிடம் தரப்படும். ஆறு மாதகாலம் நடைபெறும் முதற்கட்டப் பயிற்சி முடிந்ததும் மேற்கொண்டு இரண்டாம் கட்டப் பயிற்சிக்கு ஆர்வமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் நன்கு கல்விக்கற்றுத் தகுந்த சான்றிதழ்களுடன் வெளிவரும் மாணவர்களுக்கு மேற்கொண்டு கல்வியைத் தொடர யுனிவர்சிட்டி சிலாங்கூரில் வாய்ப்பு வழங்கப்படும். ஆகவே ஏழையால் எதுவும் முடியாது என்ற பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, நம் மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறந்த முறையில் பயன் படுத்திக்கொள்ள முன்வர வேண்டும்.

அத்துறைகளில் பயிற்சி பெற்றவர்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே இன்பெனஸ் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியான மாணவர்களுக்குச் சில துறைகளில் உதவ அவர்கள் (55447306) என்ற எண்ணில் எனது அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

TAGS: