இந்தோனேஷியாவில் 7 பேர் சுட்டுக்கொலை

indo_attackஜயபுரா : இந்தோனேஷியாவில் உள்ள பப்புவா என்ற பகுதியில், அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய, இருவேறு தாக்குதல்களில் ஐந்து இராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஏழு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள, பதட்டம் நிறைந்த பப்புவா மாகாணத்தின் டிங்கி நம்புத் கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள், இராணுவ வாகனம் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மூன்று இராணுவ அதிகாரிகளும் ஒரு இராணுவ வீரரும் உயிரிழந்தனர். மேலும், அப்பாவி பொதுமக்கள் இருவர் பலியாயினர்.

இதே பகுதியில் உள்ள மற்றொரு இராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில், இராணுவ வீரர் ஒருவர் பலியானார். இந்த தாக்குதலுக்கு, ‘சுதந்திர பப்புவா இயக்கம்’ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள், காரணமாக இருக்கலாம் என இந்தோனேஷிய இராணுவ உயரதிகாரி இஸ்கந்தர் சிதாம்புல், தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் காலனியாக இருந்த பப்புவா பகுதி, 1969ல் இந்தோனேஷியாவுடன் இணைக்கப்பட்டது. அதற்கு பிறகு, இந்தோனேஷியாவிடம் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், ‘சுதந்திர பப்புவா இயக்கம்’ போராடி வருவது குறிப்பிடத்தக்கது.