மணிலாவில் ஆர்ப்பாட்டங்கள், நஜிப் படம் எரிக்கப்பட்டது

manilaமணிலா மக்காத்தி சிட்டியில் உள்ள மலேசியத் தூதரகத்துக்கு வெளியில் பிலிப்பினோ போராளிகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சபாவில் சுலு சுல்தானுக்கு ஆதரவான ஆயுதமேந்தியக் குழுக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையை நிறுத்துமாறு அவர்கள் கோரினர்.

அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், பிலிப்பின்ஸ் அதிபர் பெனிக்னோ அக்கினோவுடன் கைகுலுக்கும் படம் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிக்கும் எரியூட்டினர்.

சுலு சுல்தான் இராணுவத்தினர் பதுங்கியுள்ள கம்போங் தண்டுவோ-வில் மலேசியப் பாதுகாப்புப் படைகள் குண்டு வீசத் தொடங்கிய பின்னர் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை மலேசியத் தூதரகத்துக்கு எதிரில் கூடத் தொடங்கியதாக ஏஎன்எஸ்-சிபிஎன் செய்தி நிறுவனம் கூறியது.

manila1ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்தவர்கள் என அது தெரிவித்தது. அவர்களில் ஒரு பகுதியினர் சுலு சுல்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். சபாவில் உள்ள சுலு சுல்தான் இராணுவத்தினரை அவர்கள் “தாவ்சுக் தியாகிகள்” என வருணிக்கும் பதாதைகளை வைத்திருந்தனர்.

சில குழுக்கள் சமயத் தொனியைக் கொண்டிருக்கவில்லை. மாறாக சபா மீதான் கோரிக்கைக்கு  பிலிப்பின்ஸ் அரசாங்கம் புத்துயிரூட்ட வேண்டும் என அவை கேட்டுக் கொண்டன.

சபா மீதான் சுலு சுல்தான் கோரிக்கை ‘முழுக்க முழுக்க சட்டப்பூர்வமானது’ என பிலிப்பின்ஸ் குடியேற்றக்காரர் உரிமைகளுக்கு போராடும் Migrante என்ற அமைப்பின் தலைவர் Connie Bragas-Regalado  பிலிப்பின்ஸ் செய்தி இணையத் தளமான Inquirer.net -டிடம் கூறினார்.

நண்பகல் வாக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாகக் கலைந்து சென்றனர். ஆனால் மேலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் என அவர்கள் எச்சரித்தனர்.

மலேசியத் தூதரகம் இன்று காலை மூடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களை 50க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.