தனியார் துப்பறிவாளர் பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் ரவாங்கில் காலமானார். அவர் மாரடைப்பால் மரணமடைந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
ரவாங்கில், பிற்பகல் மணி 1.40க்கு அவரது வீட்டில் பகலுணவு அருந்திக் கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
“(காலையில்) சுபாங் ஜெயாவுக்கு மருத்துவ சோதனைக்குச் சென்று திரும்பிய பாலா நன்றாகத்தான் இருந்தார். பகலுணவுக்குப் பின்னர் அவருக்கு விக்கல் வந்தது. அப்படியே சாய்ந்து விட்டார்.
“உனடியாக மருத்துவ நிலையம் ஒன்றுக்குக் கொண்டு சென்றோம். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்”, எனப் பாலாவின் நண்பர் கணேசன் சுப்பையா கூறினார்.
மருத்துவ நிலையத்தை அடைவதற்கு முன்பே பாலா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கணேசன் கூறினார்.
“இரண்டு வாரங்களில் அவருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட விருந்தது”, என வழக்குரைஞரும் சுபாங் எம்பியுமான ஆர்.சிவராசா தெரிவித்தார்.
கடந்த மாதம் கோத்தா பாருவில் பக்காத்தான் ரக்யாட் செராமா ஒன்றில் பேசிக்கொண்டிருந்தபோது பாலாவுக்குச் சிறு மாரடைப்பு ஏற்பட்டது. அதனை அடுத்து 10 நாள்கள் சுபாங் ஜெயா சைம் டார்பி மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டு சிசிச்சை பெற்றார்.
53 வயது நிரம்பிய பாலா கடந்த திங்கள்கிழமை மலேசியாகினிக்கு நேர்காணல் ஒன்றை வழங்கினார்.
அதுவே, ஊடகங்களுக்கு அவர் வழங்கிய கடைசி நேர்காணல் என நம்பப்படுகிறது. அந்நேர்காணலின்போது உற்சாகத்துடன் காணப்பட்ட பாலா, இருதயம் தொல்லை கொடுத்தாலும் பக்காத்தானின் தேர்தல் பரப்புரைக்குத் தொடர்ந்து உதவப்போவதாகக் கூறினார்.