ஐஜிபி அவர்களே, தியான் சுவா-வைக் கைது செய்ய முடியும் என்றால் ஏன் ஹாரிஸை முடியாது ?

IGP“கிளந்தானில் சாதாரண ஆசிரியரைப் பிடித்தது போல ஹாரிஸை கைது செய்து குற்றம் சாட்டும் துணிச்சல்  ஐஜிபி-க்கு உள்ளதா ? அல்லது வெவ்வேறு வகையான மக்களுக்கு வெவ்வேறு வகையான நீதியா ?

“முன்னாள் சபா முதலமைச்சர் சொன்னது மீது ஐஜிபி வெடித்தார்”

பெர்ட் தான்: சுலு சமூக மக்களுக்குச் சொந்தமான அடையாளக் கார்டுகளையும் மற்ற அடையாள
ஆவணங்களையும் போலீஸ்காரர்கள் அழித்துள்ளதாக முன்னாள் சபா முதலமைச்சர் ஹாரிஸ் சாலே கூறிய
குற்றச்சாட்டை மறுத்த போது வழக்கமாக பொறுமையுடன் இருக்கும் தேசியப் போலீஸ் படைத் தலைவர்
இஸ்மாயில் ஒமார் மிகவும் ஆத்திரமடைந்தார்.

அவர் முகத்தில் கோபம் தெரிந்தது. ஆத்திரத்துடன் அவர் மேசையில் குத்தினார். ஆனால் அத்துடன் ஏன் நிற்க
வேண்டும் ? இதை விட லேசான காரணத்துக்காக பத்து எம்பியும் பிகேஆர் உதவித் தலைவருமான தியான்
சுவா உட்பட பலரைப் போலீஸ் விசாரித்துள்ளது, மிரட்டியுள்ளது, கைது செய்துள்ளது. ஏன் இந்த இரட்டைத்
தரம்.

தியான் சுவா விவகாரத்தில் கூறப்படுவதைப் போன்று ஹாரிஸ் சாலே போலீசாரின் நல்ல பணிகளையும்
தோற்றத்தையும் கீழறுப்புச் செய்யவில்லையா ? போலீசுக்கு எதிராக அல்ல, அம்னோவுக்கு எதிராக தூண்டும்
கருத்துக்களைச் சொன்னதாகவே தியான் சுவா மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு போடப்பட்டுள்ளது.

ஹாரிஸ் அதை விட மோசமாகச் சொல்லியிருக்கிறார். சபாவில் பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிடும்
போலீஸ் அதிகாரிகளான- நமது ஹீரோக்கள் மீது அவதூறான சொற்களை அவர் சொல்லியிருக்கிறார்.

தியான் சுவாவை கைது செய்ய போதுமான ஆதாரம் இருப்பதாக நீங்கள் எண்ணினால் ஹாரிஸை பிடிக்கவும்
போதுமான ஆதாரம் இருப்பதாக நீங்கள் கருதவில்லையா ? நாங்கள் உங்களுக்கு மரியாதை கொடுக்க
வேண்டுமானால் உங்கள் நடவடிக்கை மூலம் காட்டுங்கள். ஆத்திரத்தைக் காட்ட வேண்டும். அதில் எந்த
அர்த்தமும் இல்லை.

பெர்னார்ட் பிலிப்ஸ்: இஸ்மாயில் ஒமாருக்கு மோசமான நாள். அவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விட்டார்.  அத்துடன் விட்டு விடுவோம். ஹாரிஸ் சாலே சுமத்தியுள்ள குற்றச்சாட்டை ஆராய்வோம்.

அவ்வாறு சொல்லியிருப்பது சாதாரண மனிதர் அல்ல. ஐஜிபி அவரை அழைத்து ஆதாரத்தைக் கோரியிருக்க
வேண்டும். ஹாரிஸ் அவருக்கு எளிதாக ஆதாரங்களைக் கொடுத்திருப்பார். அதனைத் தொடர்ந்து போலீஸ் விரிவான  ஆய்வை நடத்தியிருக்கலாம்.

யாருடைய அடையாளக் கார்டுகளை அவர்கள் கைப்பற்றினார்கள், ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பதையும்
அறிய முடியும்.

அரச விசாரணை ஆணையத்தில் அண்மையில் அம்பலப்படுத்தப்பட்ட விஷயங்கள் அதற்குக் காரணமாக
இருக்கலாம் என நான் எண்ணுகிறேன்.

ஸ்டார்ர்: ‘துடைத்தொழிப்பு’ நடவடிக்கையின் போது சுலு மக்களுடைய அடையாளக் கார்டுகளை போலீசார்
அழித்துள்ளதாக ஹாரிஸ் சாலே சொன்னதை ஐஜிபி மறுப்பது சரியே.

சபா ஆர்சிஐ-யில் சாட்சியமளித்த போது ஹாரிஸ், அடையாளக் கார்டு திட்டம் பற்றித் தமக்கு ஏதும் தெரியாது
எனச் சொன்னார். அவர் இப்போது அந்தக் குற்றச்சாட்டைச் சொல்வது தான் வேடிக்கையாக இருக்கிறது.

சபா மக்கள் தொகை அமைப்பை மாற்றி முஸ்லிம் ஆதிக்கம் பெற்ற அரசாங்கம் இருப்பதை உறுதி செய்ய அவர்  அந்த மோசடிக்குத் திட்டமிட்டவர்களுடன் ஒத்துழைத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அவர் அதற்காக்க தவாவ் பாலுங் தோட்டத்தில் நடவடிக்கை மய்யம் ஒன்றை அமைத்தார். தாம் முதலமைச்சராக  இருந்த போதும் பெர்ஜெயா காலத்துக்குப் பின்னர் Yayasan Islam Sabah அமைப்பு வழியாகவும் அவர்  அதனைச் செய்தார். அந்த ‘புதிய குடிமக்களுடைய’ நலன்களை பாதுகாப்பது அந்த இஸ்லாமிய அமைப்பின்  நோக்கமாகும். அதற்கு ஈடாக அந்த ‘புதிய குடிமக்கள்’ ஹாரிஸ் தமது அரசியல் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ள உதவினர்.

இப்போது அந்த நடவடிக்கை அவரையே திருப்பி அடிக்கிறது. போலி அடையாளக் கார்டுகளுடன்
ஆயிரக்கணக்கான சுலு மக்கள் இருப்பது போலீசுக்கு பாதுகாப்புப் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில் அந்தப் போலி அடையாளக் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட வேண்டும்.

வெறுப்படைந்தவன்: கிளந்தானில் சாதாரண ஆசிரியரைப் பிடித்தது போல ஹாரிஸை கைது செய்து குற்றம்
சாட்டும் துணிச்சல் ஐஜிபி-க்கு உள்ளதா ? அல்லது வெவ்வேறு வகையான மக்களுக்கு வெவ்வேறு வகையான  நீதியா ? இவ்வாறு பாகுபாடாக நடந்து கொண்டால் யார் போலீஸ்காரர்களை மதிக்கப் போகிறார்ர்கள் ?

அகமட்: நாட்டுப் பற்றுடன் நடந்து கொள்ளாததற்கும் போலீஸ் மீது அவதூறு சொன்னதற்கும் ஏன் ஹாரிஸ்
சாலே மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை ? அத்துடன் அடையாளக் கார்டு திட்டத்தில் மகாதீருக்கு
உடந்தையாக இருந்தவர்களில் அவரும் ஒருவர். ஹாரிஸ் சாலே மீது குற்றம் சாட்டுங்கள்.

உங்கள் அடிச்சுவட்டில்: ஐஜிபி அவர்களே, உங்கள் நாட்டுப் பற்று குறித்தும் போலீஸ் படையின் நாட்டுப் பற்று  குறித்தும் யாரும் கேள்வி எழுப்பவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஒருவர் அந்தக் குற்றச்சாட்டுக்களை  சுமத்தியுள்ளார். அவருக்கு வேறு சில வட்டாரங்களிலிருந்து தகவல் கிடைத்திருக்க வேண்டும்.

அந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மை இல்லை என்றால் அவை உண்மை இல்லை எனச் சொல்லுங்கள்.
ஆதாரமற்ற அந்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர்களைப் பற்றி விசாரியுங்கள். அது உண்மையா இல்லையா  என்பது உங்களுக்குத் தெரியாது. ஆகவே விசாரிப்பதாகச் சொல்லுங்கள்.

உங்கள் ஆட்கள் தவறு செய்ய மாட்டார்கள் என எண்ண வேண்டாம். போலீசாருக்கு நாட்டுப் பற்று இல்லை
என்றோ அவர்கள் நாட்டுக்காக தியாகம் செய்யவில்லை என்றோ நான் சொல்லவில்லை.

TAGS: