டிவி3 மூத்த நிர்வாகிகளை ஜெயிலில் போடுவேன்; அன்வார் மருட்டல்

anwarமே 5ம் தேதி பக்காத்தான் ராக்யாட் அடுத்த அரசாங்கத்தை அமைக்குமானால் டிவி3 என அழைக்கப்படும்  Sistem Televisyen (M) Bhd-ன் உயர் நிலை நிர்வாக அதிகாரிகளை அவதூறு சொன்னதற்காக சிறையில் அடைக்கப் போவதாக எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.

பக்காத்தான் அவதூறுகளை அனுமதிக்காது. காரணம் அதன் அரசாங்கம் உயர்ந்த தார்மீகப் பண்புகளைக்
கொண்டிருக்கும் என அவர் சொன்னதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

“நாங்கள் அடுத்த அரசாங்கத்தை அமைக்கும் போது டிவி3 தொடர்ந்து அவதூறுகளை வீசினால் நாங்கள்
அவர்களைச் சிறைக்குள் தள்ளுவோம்,” என பேராக் சங்காட் ஜெரிங்கில் செராமா ஒன்றில் சொன்னதாக அந்த
ஏடு தெரிவித்துள்ளது.

டிவி3 தனியார் தொலைக்காட்சி நிறுவனமாகும். அதனை மீடியா பிரிமா பெர்ஹாட் குழுமம் நடத்தி வருகின்றது. அதற்கு பெரித்தா ஹரியானும் நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸும் சொந்தமானதாகும்.

சுலு சுல்தான் ஜமிலுல் கிராமுடன் தாம் பேச்சு நடத்தியதாக கூறப்படுவது மீது பிஎன் இன்னொரு அவதூறை
சுமத்தும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அன்வார் கூறியதாக பெரித்தா ஹரியான் அந்தச் செய்தியில்
குறிப்பிட்டுள்ளது.

சங்காட் ஜெரிங் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் பேராக் மந்திரி புசார் முகமட் நிஸார் ஜமாலுதினுக்கு ஆதரவாக அன்வார் அங்கு பிரச்சாரம் செய்தார்.