பக்கத்தானை புத்ரா ஜெயா பக்கம் நெருங்க விடாதீர், ஹிண்ட்ராப்

hindraf‘பிஎன் -னுக்கு அளிக்கும் வாக்கு உண்மையில் பெருந்திட்டத்துக்குக் கொடுக்கப்படும் வாக்கு என ஹிண்ட்ராப் தலைவர்கள் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த  அந்த அமைப்பின் மூன்றாவது தேசிய மாநாட்டில் கூறியுள்ளனர்.

அதனால் ஆளும் கூட்டணியை ஹிண்ட்ராப் உறுப்பினர்கள் ஆதரிக்க வேண்டும் என அதன் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பிஎன் -உடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தைக் குறை கூறுகின்றவர்களைச் சாடிய ஹிண்ட்ராப் தேசிய ஆலோசகர் என் கணேசன்,  அவர்கள் அந்த நிகழ்வின் ‘உண்மையான முக்கியத்துவத்தை’ திசை திருப்ப முயற்சி செய்வதாகச் சொன்னார். புத்ராஜெயாவுக்கு அருகில் எந்த இடத்துக்கும் பக்காத்தான் செல்ல விடாமல் உறுப்பினர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே ஹிண்ட்ராப் நடவடிக்கைகள் எந்த ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் வாய்ப்புக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என அதன் தலைவர் பி வேதமூர்த்தி வெளியிட்ட அறிக்கை கூறியுள்ளது.

“நாங்கள் எந்த தனிநபரையும் பிரதமராகவோ அல்லது துணைப் பிரதமராகவோ அல்லது எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியும் புத்ராஜெயாவுக்கோ அல்லது மாநிலச் சட்டமன்றங்களுக்குச் செல்வதற்காகவோ நாங்கள் அதனைச் செய்யவில்லை.”

“நமது உறுப்பினர்களுடைய உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் கடப்பாடு கொண்டுள்ள அமைப்பே நாங்கள்,” என வேதமூர்த்தி சொன்னார்.

என்றாலும் ஹிண்ட்ராப் துணைத் தலைவர் ஜம்புலிங்கம் தமது தலைவர் சொன்னதற்கு முரண்பாடாக பிஎன் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கு ஹிண்ட்ராப் உறுப்பினர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

“நீங்களும் உங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து மக்களும் உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு வாக்களிக்கின்றீர்கள். எதிர்காலம் உங்கள் கையில் இருக்கிறது.”

“பெருந்திட்டத்தில் உள்ள அம்சங்களுக்கு வாக்குறுதி அளிக்கும் புதிய ஒப்பந்தம் நிறைவேற நாம் பிஎன் மீண்டும் தேர்வு பெற உதவ வேண்டும்,” என அவர் சொன்னதாக கூறப்பட்டது.

இந்தியர்களுடைய மேம்பாட்டைக் கருத்தில் கொண்ட ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் அடங்கியிருந்த ஆறு முக்கியப் பகுதிகளில் நான்கை நிறைவேற்றுவதற்கு ஹிண்ட்ராப் புரிந்துணர்வுப் பத்திரத்தின் வழி ஏப்ரல் 18ம் தேதி பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொண்டார்.

அந்தப் பெருந்திட்டத்துக்கு முழுமையாக பக்காத்தான் ராக்யாட்டிடமிருந்து அங்கீகாரம் பெற ஹிண்ட்ராப் முயன்றது. ஆனால் பெருந்திட்டத்தில் உள்ள 16 அம்சங்களில் 14ஐ எதிர்த்தரப்பு அமலாக்கும் என கேலாங் பாத்தாவில் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் அறிவித்த போது அது ஏமாற்றம் தெரிவித்ததுடன் லிம் தங்கள் பெருந்திட்டத்தை ‘திருடி விட்டதாகவும்’ குற்றம் சாட்டியது.

ஹிண்ட்ராப் பெயருக்கு தனி உரிமை

நஜிப்புடன் ஹிண்ட்ராப் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் பெருந்திட்ட அம்சங்கள் முழுமையாக இடம் பெறவில்லை என்பதோடு அந்த புரிந்துணர்வு பத்திரத்தில் இரண்டு முக்கிய ஹிண்ட்ராப் கோரிக்கைகளும் விடுபட்டுள்ளன.

இனவாதம், போலீஸ் தடுப்புக் காவல் மரணங்கள் ஆகியவையே அந்த விஷயங்களாகும். அத்துடன் அந்த புரிந்துணர்வுப் பத்திரத்தின் முழு விவரமும் பொது மக்களுக்கு வெளியிடப்படவில்லை.

ஹிண்ட்ராப், பிஎன் -உடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மீது அதிர்ச்சி அடைந்தவர்களில் வேதமூர்த்தியின் சகோதரரும் ஹிண்டராப்பை தோற்றுவித்தவருமான பி உதயகுமாரும் ஒருவர் ஆவார். அவர் இப்போது பிரிந்து சென்ற மனித உரிமைக் கட்சிக்குத் தலைமை தாங்குகிறார்.

தமது சகோதரரின் நடவடிக்கையைச் சாடிய உதயகுமார் வேதமூர்த்தி “அடுத்த சாமிவேலு-வாக” விரும்புவதாகச் சொன்னார்.

தம்மைக் குறை கூறுகின்றவர்களைச் சாடியுள்ள வேதமூர்த்தி,”  தொடர்ந்து சண்டை போடும் உணர்வைப் பெற்றிருக்குமாறு அவர்கள் ஹிண்ட்ராப் உறுப்பினர்களைத் தூண்டி வருகின்றனர்,”என்றார்.

ஹிண்ட்ராப் பெயருக்கு சிறப்புத் தனியுரிமை கோரிய அவர், மற்ற ஹிண்ட்ராப் தலைவர்களையும் எச்சரித்தார். “அவர்கள் இனிமேலும் ஹிண்ட்ராப்புக்குச் சொந்தமானவர்கள் அல்ல. அவர்கள் ஹிண்ட்ராப்பை பிரதிநிதிக்கவில்லை.”

“ஹிண்ட்ராப் பிரதிநிதிகள் என அவர்கள் கூறிக் கொண்டால் அவர்கள் கிரிமினல் நடவடிக்கையைச்  செய்கின்றனர்.”

“இப்போது ஹிண்டராப் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்ட அமைப்பாகும். அது இனிமேலும் அதிகாரப்பற்றற்ற அமைப்பு அல்ல.”

“தாங்கள் ஹிண்ட்ராப்பை பிரதிநிதிப்பதாக அவர்கள் சொன்னால் அவர்கள் உண்மையில் அப்படி அல்ல. அவர்கள் கிரிமினல் நடவடிக்கையைச் செய்கின்றனர். அவர்கள் மீது ஹிண்ட்ராப் நடவடிக்கை எடுக்கும்,” என்றும் வேதமூர்த்தி சொன்னார்.

 

TAGS: