‘இந்திய சமுதாயம் தன்மானமுடையது என்பதை அம்னோவிற்கு உணர்த்துவோம்’

XavierJayakumar-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏப்ரல் 24, 2013.

நேற்று வெளிவந்த நாளிதழ்களில் இந்திய சமுதாயம்  சூல்கிப்ளி நோர்டினை ஏற்றுக் கொண்டு விட்டது என்று பிரதமர் கூறியுள்ளது இந்தியர்களை எப்படி வேண்டுமாலானலும் ஏமாற்றலாம் என்பதில் அவர் மிகுந்த “நம்பிக்கை” கொண்டுள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

வேதமூர்த்தி பாரிசானுடன் தேர்தல் பிரகடனம்  செய்துகொண்டதும், ஒரு தனி நபர்  இந்து சமயத்தை ஏளனம் செய்த சூல்கிப்ளி நோர்டினை கட்டித் தழுவிக் கொண்டால் அது சூல்கிப்ளி நோர்டினை  இந்திய சமுதாயமே ஏற்றுக் கொண்டதாக அர்த்தமாகாது.

மேலும், பிரதமரின் இந்த அறிக்கை, அவர் இந்திய சமுதாயத்தின்  ஏமாளித்தனம் மீது எவ்வளவு  நம்பிக்கையுடையவராக இருக்கிறார் என்பதனைக் காட்டுகிறது. கடந்த காலங்களில் பாரிசான் பங்காளித்துவம் என்ற போர்வையில் அம்னோ என்ற அதன் பிள்ளையை ஊட்டி வளர்த்ததால் இன்று ம.இ.கா மட்டும்  நோஞ்சானாக  வளராமல் அது பிரதிநிதிப்பதாக கூறிக்கொள்ளும் இந்திய சமுதாயத்தையே படுபாதாளத்தில்  தள்ளிவிட்டிருப்பதை  மக்கள் நன்கு உணர்ந்து விட்டனர்.

இந்நாட்டில் இந்திய, சீன இனங்களை  சூல்கிப்ளி நோர்டின் ஏளனம் செய்யலாம். இந்து, கிறிஸ்துவ மதங்களை கேலி பேசலாம், இந்நாட்டில் சீன, தமிழ்ப்பள்ளிகள் உயிர் வாழ சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கூறலாம், நமது பண்பாட்டை எவ்வளவு கேவலமாகச் சித்தரிக்க முடியுமோ அதையும் செய்யலாம், அவர்மீது நூற்றுக்கணக்கான போலீஸ்  புகார்கள் கொடுத்தாலும், சட்டம் சும்மா இருக்கும்.

அவரின்  கேலிக்கிண்டலை அங்கீகரித்து பிரதமர் அவருக்கும், அவரின் தலைவர்  இப்ராஹிம் அலிக்கும்  நாடாளுமன்றத்திற்கு போட்டியிட சீட் தருவார். ஷா ஆலாம்  செக்சன் 19 மகா மாரியம்மன் ஆலயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெட்டிய மாட்டுத் தலையுடன் தனது  சகோதரனைப் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்த  அமாட் நவாவிக்கு  பத்துதீகா சட்டமன்ற சீட் தருவார். அதற்கும் ஒருவர் முத்தம் தருவார். அதனையும் இந்தச் சமுதாயம் ஏற்று கொண்டு வாக்களிக்க வேண்டும்.

இப்படிப்பட்டவர்களை     நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்களாக போடுவதே தப்பு, அவர்களுக்குக்  கிடைக்கும் ஒவ்வொரு ஓட்டும் அவர்களின் தீவிரவாதத்தை ஆதரிப்பதாக இருக்கும். இது ஷா அலாம் போன்ற படித்தவர்கள் உள்ள தொகுதிகளில் இனத் தீவிரவாதிகளை வைத்து, அம்னோவின் செல்வாக்கைச் சோதிக்கும் செயல்.

zulkfliடாக்டர்  மகாதீர் போன்ற ஒரு தீவிரவாதியை இந்த நாடு வளர விட்டதால், இந்திய சமுதாயம் எல்லாவற்றிலும்  50 ஆண்டுகள் பின்தங்கி விட்டது. இன்று பிரதமர் நஜிப் மூன்று தீவிரவாதிகளுக்கு இடமளித்து இந்திய சமுதாயம்  அவர்களை ஏற்றுக்கொள்ளும் என்று கூறியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிவது போல்  இருக்கிறது.

இவர்கள் தப்பித் தவறி நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ அனுப்பப் பட்டால், அவர்களின்  இன வாத அணுகுமுறைகளை அனைவரும்  ஏற்றுக்கொண்டதாகத்தானே  அர்த்தப்படும். அவர்கள் நாடாளுமன்றத்தில்  இன்னும் துணிவாக இனவாதத்தைப் பேசமாட்டார்களா என்பதனை  அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த 56 ஆண்டுகால அம்னோ ஆட்சியில் இந்திய சமுதாயத்திடமிருந்து எல்லாவற்றையும் பறித்துக் கொண்டார்கள், இனிப் பறிக்க நம்மிடம் ஏதுமில்லை என்று எண்ணியிருந்த இச்சமுதாயத்தின் தன்மானத்திற்குச் சோதனை வைத்துள்ளார் பிரதமர். இச்சமுதாயத்தில் அனைவரும் தன்மானத்தை விற்று விட்டார்களா? இன்னும் எத்தனைப் பேர் பணத்திற்கு அடிமையாகாமல், கை, காலுக்கு முத்தம் கொடுக்காமல் சுயமரியாதையுடன் இருக்கிறார்கள்  என்று  நோட்டமிடுகிறாரா, பிரதமர்?

இந்திய சமுதாயம்உணர்வைமட்டும்கொண்டதல்ல.தன்மானமுள்ள சமுதாயம் என்பதை பாரிசானுக்கு உணர்த்துவோம். இந்த முறை சூல்கிப்ளி நோர்டினுக்குமட்டுமல்ல, இப்ராஹிம் அலிக்கும், அமாட் நவாவிக்கும், ஏன், ஒட்டுமொத்த பாரிசானுக்கே நமது தன்மான உணர்வைக் காட்டுவோம்.

TAGS: