பார்வையாளர்கள்: பொதுத் தேர்தலில் ஓரளவு சுதந்திரம் இருந்தது ஆனால், நியாயமாக நடத்தப்படவில்லை

ob13வது பொதுத் தேர்தலில் பார்வையாளர்களாக அங்கீகரிப்பட்ட சிந்தனைக் குழுக்களான CPPS / Asli and Ideas ஆகியவை வெளியிட்டிருக்கும் இடைக்கால அறிக்கை, ‘தேர்தலில் ஓரளவுக்கு சுதந்திரம் இருந்தது. ஆனால், நியாயமாக நடத்தப்படவில்லை’ எனக் கூறியுள்ளது.

“எங்கள் மதிப்பீட்டு அளவு அனைத்துலக நாடாளுமன்ற சங்க(ஐபியு)ப் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டது.

ob 1“மலேசியா ஐபியு உறுப்பினர் என்பதால் அதைப் பின்பற்றக் கடமைப்பட்டுள்ளது”, என்று ஐடியாஸ் தலைமை செயல் அதிகாரி வான் சைபுல் வான் ஜான் (இடம்)  இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இடைக்கால அறிக்கையை வழங்கியபோது கூறினார்.

தேர்தல் ஆணையம் வாக்களிப்பு நடைமுறைக்கான ஏற்பாடுகளைத் திறமையாகவும் செம்மையாகவும் செய்திருந்தது என்றவர்கள் கூறினர்.

தேர்தல் நடத்தப்பட்ட விதம், வேட்பாளர் நியமனம், பரப்புரை, வாக்களிப்பு, தேர்தல் முடிவு அறிவித்தல் முதலியவற்றில் சிற்சில குறைகள் இருந்தாலும் மொத்தத்தில் முறையாகவே நடத்தப்பட்டன.

ob 2ஆனால், ஊடகங்கள்  பிஎன் -ஆதரவு செய்திகளை மட்டுமே வெளியிட்டது,  அரசாங்க வசதிகளைப் பயன்படுத்திக்கொள்வதில் நிகழ்ந்த அத்துமீறல்கள்,  வாக்காளர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியது, பிரச்னைக்குரிய வாக்காளர் பட்டியல் போன்றவற்றைப் பார்க்கையில் தேர்தல்‘ஓரளவுக்கு சுதந்திரமாக நடந்தது ஆனால், நிச்சயமாக நேர்மையாக நடக்கவில்லை’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது என்றவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

“யாரும் வாக்களிக்கலாம் யாரும் போட்டியிடலாம், யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். ஆனால், வாக்காளர்களுக்குப் போதுமான தகவல்கள் கிடைக்காததுதான் பெரும் குறையாக தெரிந்தது.

“அவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்ய உதவும் தகவல்கள் போதுமான அளவில் கிடைக்கவில்லை” என வான் சைபுல் கூறினார்.

அந்த இடைக்கால அறிக்கை முதலில் இன்று காலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. அதன் பின்னரே அது ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்டது.

பார்வையாளர்கள் தங்கள் பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை விரைவில் தயாரித்து இசி-இடம் வழங்குவர்.

என்ஜிஓ-களின் அடுத்த நடவடிக்கை

அந்த இரு என்ஜிஓ-களின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று வினவியதற்கு, தேர்தல் முறை பற்றிய மக்களின் விழிப்புணர்வை அதிகரிக்க தேர்தலில் தாங்கள் கண்டுணர்ந்ததை மக்களுக்குத் தெரிவிப்பதுதான் தங்கள் முதல் கடமை என்றவர்கள் கூறினர்.

அதன்பின்னர், தேர்தல் முறையை மேலும் சீர்படுத்த இசியுடனும் அரசாங்கத்துடனும் மற்ற அமைப்புகளுடனும் சேர்ந்து பாடுபடுவது அவர்களின் நோக்கமாகும்.

சிபிபிஎஸ், ஐடியாஸ் வலைத்தளங்களுக்குச் சென்று இந்த அறிக்கைகளைப் பதிவிறக்கம் செய்யலாம்.

TAGS: