பிகேஆர்: தீய நோக்கம் கொண்ட எஸ்எம்எஸ்-களைப் புறக்கணித்து பேரணிக்கு வாரீர்

rallyமக்கள் “தீய நோக்கம்கொண்ட” குறுஞ்செய்திகளைப் புறக்கணித்து தேர்தல் மோசடிக்குக் கண்டனம் தெரிவிக்க இன்று சிலாங்கூரில் நடைபெறும் பேரணிக்கு வர வேண்டும் என பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி வலியுறுத்தியுள்ளார்.

2012ஆம் ஆண்டு அமைதிப் பேரணிச் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப, கிளானா ஜெயா அரங்கில்  இன்றிரவு  மணி 8.30க்கு நடைபெறும் பேரணி பற்றி போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக ரபிஸி கூறினார்.

rally 1“போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் கேட்டுக்கொண்டுள்ளபடி, ஸ்ரீசித்தியா சட்டமன்ற உறுப்பினர் நிக் நஸ்மி நிக் அஹமட்( இடம்) மூலம் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவித்தாயிற்று”, என ரபிஸி இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

“தனியார் இடமொன்றில் பேரணி நடைபெறும் என்பதால் அதற்காக என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விட்டோம்.

“அமைதிப் பேரணிச் சட்டப்படி, இதற்கு அனுமதி தேவையில்லை. போலீசுக்குத் தெரிவிப்பதே போதுமானது”.

பொதுத் தேர்தல் மோசடிக்கு எதிர்ப்புத் தெரிவிக்க கருப்பு உடை அணிந்து வருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

தீய நோக்கம் கொண்ட குறுஞ்செய்திகள் வலம் வருவது பற்றிக் குறிப்பிட்ட ரபிஸி அவை பற்றி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்போவதாகத் தெரிவித்தார்.

குறுஞ்செய்திகள் பேரணியில் கலந்துகொள்ள வேண்டாம் என்று குறிப்பாக மலாய்க்காரர்-அல்லாதவர்களை வலியுறுத்துகின்றன. ‘அதில் கலந்துகொள்வது 1969 மே 13இல் நடந்ததைப்போல் கலவரங்கள் நடக்கக் காரணமாகலாம் ’ என்றவை எச்சரிக்கின்றன.

TAGS: