கெராக்கான், மசீச-வை பின்பற்றி அரசாங்கப் பதவிகளை நிராகரிக்காது

அண்மைய பொதுத் தேர்தலில் மிக மோசமான அடைவு நிலையைப் பெற்றதால் எல்லா அரசாங்கப்  பதவிகளையும் நிராகரித்து தனது சேவை மய்யங்களை மூடும் மசீச-வை கெராக்கான் கட்சி பின்பற்றாது.

changஇவ்வாறு அந்தக் கட்சியின் துணைத் தலைவர் சாங் கோ யூவான் கூறியிருக்கிறார்.

பாரிசான் நேசனல் பின்பற்றும் கொள்கைகளிலும் பிரச்சாரம் செய்யும் சித்தாந்தகளிலும் கெராக்கான் நம்பிக்கை  வைத்திருப்பதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

“நீங்கள் மோசமாக தோல்வி கண்டது, நீங்கள் பதவியை நிராகரிக்க வேண்டும் என அர்த்தமல்ல. உங்களுக்கு  கொள்கை வேறுபாடுகள் இருந்தால் அல்லது அரசாங்கக் கொள்கைகளில் உங்களுக்கு இணக்கம் இல்லா  விட்டால் நீங்கள் பதவியை நிராகரிக்கலாம் அல்லது ஏற்க மறுக்கலாம்,” என அவர் ஈப்போவில் நிருபர்களிடம்  கூறினார்.

கெராக்கான் பிஎன் -னிலிருந்து விலக வேண்டும் என்ற கருத்தையும் தாம் ஒப்புக் கொள்ளவில்லை என பேராக்  கெராக்கான் தலைவருமான சாங் சொன்னார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தலைமைத்துவத்தில் பிஎன் இப்போது புதிய தோற்றத்தை பெற்றிருப்பதால்  கெராக்கான் அதிலிருந்து விலகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அண்மைய தேர்தலில் கெராக்கான் ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும்
மட்டுமே வெற்றி பெற்றது. அது மொத்தம் 11 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 31 சட்டமன்றத் தொகுதிகளிலும்  போட்டியிட்டது.

புருவாஸ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட சாங், பேராக் டிஏபி தலைவர் ங்கே கூ காம்-மிடம் 5,057
வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.

-பெர்னாமா

TAGS: