‘அஸ்மின் அலி பக்காத்தானை விட்டு வெளியேறத் தயாராகிறாரா?’

azminஅன்வார் இப்ராஹிமின் வலது கரம் எனக் கருதப்படும் முகமட் அஸ்மின் அலி பிகேஆர் கட்சியிலிருந்தும்  பக்காத்தான் ராக்யாட் கூட்டணியிலிருந்தும் வெளியேறுவதற்குத் தயாராகி வருவதாகச் சொல்லப்படுகின்றது.

“பக்காத்தான் உறுப்புக் கட்சிகளுக்கு இடையில் சிலாங்கூர் ஆட்சி மன்ற இடங்கள் ஒதுக்கீடு குறித்து மனநிறைவு  கொள்ளாததால்” அவர் கூட்டணியிலிருந்து விலக விரும்புவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத்துக்குப் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 11 மூத்த பக்காத்தான் புள்ளிகளும் அவருடன்
வெளியேறுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

கிளானா ஜெயாவில் நேற்றிரவு நடைபெற்ற மாபெரும் பக்காத்தான் பேரணியில் அஸ்மின் கலந்து
கொள்ளவில்லை. அந்த நிகழ்வு பற்றி அஸ்மின் டிவிட்டரில் தமது எண்ணங்களை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் முடிந்த 13வது பொதுத் தேர்தலில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஏற்றுக் கொள்ளுமாறு பக்காத்தானைக் கேட்டுக் கொண்டதுடன் அதற்கு ஏற்பாடு செய்ததற்காக பக்காத்தானையும் அஸ்மின் அதில் சாடியுள்ளார்.

அஸ்மின் டிவிட்டர் தகவல்: “Rakyat letih dengan asakan politik melampau. Terima hukuman, muhasabah diri,
akui kelemahan, maju ke hadapan, tumpu rakyat bukan kerabat.”

(மக்கள் மிதமிஞ்சிய அரசியல் நெருக்குதலினால் களைப்படைந்து விட்டனர். தண்டனையை ஏற்றுக்
கொள்ளுங்கள். உங்களை மதிப்பீடு செய்து கொள்ளுங்கள், பலவீனத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்,
முன்னேறுங்கள், மக்கள் மீது கவனம் செலுத்துங்கள் உறவினர்கள் மீது அல்ல)

azmin1அஸ்மின் புதிய சிலாங்கூர் மந்திரி புசாராவதற்குப் போராடுகின்றவர்களில் ஒருவர் எனக் கருதப்படுகின்றது.
பாஸ் கட்சியின் அகமட் யூனுஸ் ஹாய்ரி உட்பட பலரது பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

என்றாலும் நடப்பு மந்திரி புசார் காலித் இப்ராஹிம் பக்காத்தான் தலைமைத்துவத்தின் தேர்வு எனக் கூறப்படுகின்றது.

அஸ்மினுடன் தொடர்பு கொள்ள யாகூ மலேசியா முயற்சி செய்தது. ஆனால் இதுவரை பலனில்லை.

‘பிகேஆர் கட்சி மீதான பொது மக்களுடைய நம்பிக்கையைச் சீர்குலைக்கக் கூடிய  ‘உறவினர்களுக்கு  உதவும்’ போக்கிலிருந்து அந்தக் கட்சியைக் காப்பாற்றுவதற்காக’ தாம் விரும்புவதாக அஸ்மின் சொன்னார் என  சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

இதர நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தாம் கட்சியிலிருந்து விலகத் தயாராகி வருவதாக கூறும்
வதந்திகளையும் அவர் மறுத்தார்.

“இந்த புனிதமான போராட்டத்தை நான் கைவிட மாட்டேன். அத்துடன் மாற்றத்தை விரும்பும் மக்களுடைய நம்பிக்கைக்கு துரோகம் செய்யவும் மாட்டேன்,” என்றார் அஸ்மின்.

-யாகூ! மலேசியா