எதிர்க்கட்சிகள் பெரிய வேடதாரிகள்-நஜிப்

najibபிஎன் -னுக்குச் சாதகமாக உள்ள 13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் மறுப்பது  பெரிய கபட நாடகம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வருணித்துள்ளார்.

தேர்தல்கள் கறை படிந்தவை எனக் கூறிக் கொள்ளும் அவர்கள் தங்களுக்கு நன்மை அளித்துள்ள முடிவுகளை  ஏற்றுக் கொள்கின்றனர் என அவர் சொன்னார்.

“தேர்தல் முறை கறை படிந்தது என்றால் அவர்கள் ஏன் பினாங்கிலும் கிளந்தானிலும் பதவி உறுதிமொழி  எடுத்துக் கொண்டார்கள். சிலாங்கூரில் யார் மந்திரி புசாராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்வது என்பது  மீது ஏன் சர்ச்சையில் ஈடுபட வேண்டும் ? ஏன் பெர்மாத்தாங் பாவ், கேலாங் பாத்தா முடிவுகளை ஏற்றுக்  கொள்ள வேண்டும் ?”

“சட்டமன்ற, நாடாளுமன்ற நிலைகளில் ஒரே முறை தான் பயன்படுத்தப்பட்டது. முடிவுகள் அவர்களுக்கு நன்மையாக இருந்தால் அவற்றை ஏற்றுக் கொள்கின்றனர். முடிவுகள் பிஎன் -னுக்கு சாதகமாக இருந்தால் அவற்றை அவர்கள் ஆட்சேபிக்கின்றனர். இது தான் பெரிய கபட நாடகம்,” என நஜிப் சொன்னார்.

அவர், நேற்றிரவு கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிக வளாகத்தில் அம்னோவின் 67 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பேசினார்.

ஜனநாயகத்துக்கு வாதாடுகின்றவர்கள் என்ற முறையில் அவர்கள் அரசமைப்பு முறையின் கீழ் பின்பற்றப்படும்  முறையின் அடிப்படையில் அமைந்த மக்கள் முடிவை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நஜிப்  சொன்னார்.

13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக மக்கள் முடிவை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாக கூறியதாக பிஎன் தலைவருமான அவர் குறிப்பிட்டார்.

“எதிர்க்கட்சிகள் ஜனநாயகம் பற்றி அதிகம் பேசுகின்றன. மக்கள் எல்லாவற்றையும் நிர்ணயிக்க வேண்டும் எனக்  கூறுகின்றன. ஆனால் மக்கள் முடிவு செய்த நாடாளுமன்ற ஜனநாயக முடிவுகளை ஒப்புக் கொள்ள அவை  மறுக்கின்றன.”

பிஎன் வங்காள தேசிகளை வாக்காளர்கள் கொண்டு வந்ததாக கூறிக் கொள்வது, தாங்கள் முதலில் கோரிய அழியா மையின் பயன்பாடு குறித்து கேள்வி எழுப்புவது போன்ற பல காரணங்களைத் தங்கள் தோல்விக்கு எதிர்க்கட்சிகள் சொல்வதாகவும் நஜிப் சாடினார்.

“அவை சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்புகின்றன. வாய்மொழியாகவும் கதைகளைப் பரப்புகின்றன. அதனால் அறிஞர்கள் கூட அதற்கு பலியாகியுள்ளனர். இது தான் எதிர்க்கட்சிகள் பின்பற்றும் தீய வழி,” என நஜிப் சொன்னார்.

“அந்த கூற்றுக்களை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள்”

சமூக ஊடகங்களில் பொய்களைப் பரப்புவதற்குப் பதில் எதிர்க்கட்சிகள் தங்கள் கூற்றுக்களை
நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றார் பிரதமர்.

அரசாங்கத்தைக் கைப்பற்றுவதில் கடந்த 4 பொதுத் தேர்தல்களில் தோல்வி கண்ட பின்னர் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் மக்களுக்கு சிரமமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதாகவும் நாட்டின் தோற்றத்துக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாகவும் நஜிப் சாடினார்.najib1

“நீங்கள் வெளிநாடுகளில் விரிவுரை நிகழ்த்த விரும்பினால் செல்லுங்கள். ஏன் இனிமேலும் காத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? நீங்கள் நான்கு முறை தோற்று விட்டீர்கள். ஏன் இன்னும் உங்கள் பதவியில் தொடருகின்றீர்கள் ?”

“இது தான் ஜனநாயகத்தைப் பின்பற்றும் முறையா ? இது தான் நேர்மையான, வெளிப்படையான மோதலா ? உங்கள் கட்சியில் ஊழலும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவுவதும் இல்லையா ?”

“ஆனால் இன்று பிகேஆர் கட்சியில் உறவினர்களுக்கு உதவும் போக்கு நிலவுவதாக அதன் துணைத் தலைவர்  கூறிக் கொண்டுள்ளார். இது இரட்டை வேடம்,” என்றார் நஜிப்.

TAGS: