ஊராட்சி தேர்தல் மீதான வழக்கை விசாரிக்க நாள் குறிக்கப்பட்டது

localபுத்ரா ஜெயாவில் உள்ள கூட்டரசு நீதிமன்றம், ஊராட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டுவர அனுமதி கேட்டு பினாங்கு அரசு செய்துகொண்ட விண்ணப்பத்தை மே 29-இல் விசாரணை செய்யும்.

மார்ச் மாதம் அவ்விண்ணப்பம் செய்யப்பட்டது என்றும் ஆனால், பொதுத் தேர்தலுக்குப் பிறகே அது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது என்றும்  மாநில ஆட்சிக்குழுவின் ஊராட்சி, போக்குவரத்து விவகாரக்குழுத் தலைவர் செள கொன் இயோ கூறினார்.

1965-இலிருந்து பினாங்கு மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள ஊராட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டுவர பினாங்கு அரசு திட்டமிடுகிறது. அதற்காகவே இவ்விண்ணப்பம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

வழக்கில் செள, பினாங்கு அரசைப் பிரதிநிதிப்பார்

“எங்கள் விண்ணப்பத்தில், 2012–இல் கொண்டுவரப்பட்ட ஊராட்சித் தேர்தல் சட்டப்படி ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலை மாநில அரசு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருக்கிறோம்”,என செள செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

“இவ்வழக்கில் கூட்டரசு அரசும் தேர்தல் ஆணையமும் எதிர்வாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

“ஊராட்சித் தேர்தல் மீது சட்டமியற்றவும் செயல்படுத்தவும் மாநில அரசு முழு உரிமை பெற்றுள்ளது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என விரும்புகிறோம்”.

1857-இல் பிறந்து 1965-இல் செத்துப்போனது

ஊராட்சித் தேர்தலுக்குத் தடைப்போடும் கூட்டரசு சட்டங்கள் அரசமைப்பு அதிகார வரம்பைமீறுபவை எனவே, முற்றிலும் செல்லாதவை என்று அறிவிக்கப்பட வேண்டும் என்றும்  -அவர் வலியுறுத்தினார்.

ஜியார்ஜ்டவுனில் 1857 தொடங்கி ஊராட்சித் தேர்தல் நடந்து வந்தது. 1965-இல், இந்தோனேசிய எதிர்ப்பியக்கத்தின்போது அவசரகாலச் சட்டவிதியின்படி அதற்குத் தடை விதிக்கப்பட்டது.

அன்றிலிருந்து பினாங்கு மற்றும் செபராங் பிறை முனிசிபல் மன்றங்களுக்கு பெரும்பாலும் அரசியல்கட்சிகளைச் சேர்ந்தவர்களே கவுன்சிலர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள்.

என்ஜிஓ-களின் பேராளர்கள் சிலரும் கவுன்சிலர்களாக நியமனம் செய்யப்படுவதுண்டு.

TAGS: