அமைச்சரவையில் சட்டவிரோத அமைச்சர்களும் துணை அமைச்சர்களும்!

DAP Lim Kit Siang-urinationஇது ஓர் அரசமைப்புச் சட்ட கேலிக்கூத்து: செனட்டர்களாக பதவிப் பிரமாணம் செய்யப்படாததால் பால் லவ்  மற்றும் அப்துல் வாஹிட் ஒமார் ஆகியோர் சட்டப்பூர்வமான அமைச்சர்கள் அல்லர். வேதா, லோகா மற்றும் அஹமட் பாஷா, துணை அமைச்சர்கள் அல்லர் என்று இன்று டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.

 

13 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட அமைச்சரவை நஜிப் ரசாக்கு ஒரு நல்ல சகுனமும் அல்ல, நல்ல தொடக்கமும் அல்ல என்று அவர் மேலும் கூறுகிறார்.

 

இந்நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தல்கள் வரலாற்றில் கடந்த 13 ஆவது பொதுத்தேர்தல் மிகவும் நியாயமற்றதோடு தூய்மையற்றதுமாகும் என்பதோடு இத்தேர்தலில் பொதுமக்கள் அன்வாரின் பக்கத்தான் ரக்யாட்டிற்கு 51 விழுக்காடு வாக்குகளையும் நஜிப்பின் பாரிசானுக்கு 47 விழுக்காடு வாக்குகளை அளித்துள்ளது நஜிப்பின் புதிய அமைச்சரவை சட்டப்பூர்வமானதா என்று கேள்வியில் சிக்க வைத்துள்ளது.

 

13 ஆவது பொதுத்தேர்தல் தூய்மையானதாகவும், சுயேட்சையானதாகவும், நியாயமானதாகவும், இரு கூட்டணியினருக்கும் சமமான தரையில் போட்டியிருந்திருந்தால் அன்வாரும் பிகேஆரும் 60 அல்லது அதற்கும் கூடுதலாக மக்கள் ஆதரவு வாக்குகளைப் பெற்றிருக்க முடியும் என்பதோடு நாடாளுமன்ற 222 இருக்கைகளில் பெரும்பான்மையைப் பெற்றிருக்க முடியும் என்று கிட் சியாங் கூறுகிறார்.

 

தற்போது, 13 ஆவது பொதுத்தேர்தலுக்குப் பிறகு அமைக்கப்பட்ட நஜிப்பின் அமைச்சரவையும்கூட ஒரு கேலிக்கூத்தாகியிருப்பதோடு பரிகாசத்திற்குரியதாகவும் உள்ளது. ஏனென்றால், அந்த அமைச்சரவையில் இரண்டு சட்டவிரோத அமைச்சர்களும் மூன்று சட்டவிரோத துணை அமைச்சர்களும் இருக்கின்றனர். ஆனால்,  நேற்று பேரரசர் முன் நடைபெற்ற சட்டவிரோத பதவி ஏற்பு சடங்கில் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்று அவர் மேலும் கூறுகிறார்.

 

சம்பந்தப்பட்ட பிரதமர் துறையும் இதர அரசாங்க துறைகளும் சட்ட விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றாமல்  இந்த விவகாரத்தில் இந்த அளவுக்கு கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் நடந்து கொண்டது கவலை அளிப்பதோடு அதிர்ச்சியும் அளிக்கிறது என்று கூறிய கிட் சியாங், ஆறு பிரதமர்களின் கீழ் 56 ஆண்டுகால நாடாளுமன்ற ஜனநாய ஆட்சிமுறை அனுபவமுடைய இந்நாட்டில் இப்படி நடந்திருக்கவே கூடாது என்பதை அவர் வலியுறுத்தினார்.

 

கடந்த பெப்ரவரி 20 இல் டிரான்ஸ்பேரன்சி இண்டர்நேசனல்-மலேசியா தேர்தல் வாய்மை வாக்குறுதியில் நல்லாளுகைக்கான நான்கு கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டு நஜிப் கையொப்பமிட்டார். அதுவும் மீறப்பட்டுள்ளது என்பதை கிட் சியாங் சுட்டிக் காட்டினார்.

 

இதில் முரண்சுவையானது இந்த வாக்குறுதியில் நஜிப் கையொப்பமிட்டதற்கு சாட்சியாக இருந்த அந்த டிரான்ஸ்பேரன்சியின் தலைவர் பால் லவ்வே இந்த வாக்குறுதிக்கு முரணாக பிரதமர் துறையில் அவர் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு உடந்தையாக இருந்ததுதான் என்கிறார் கிட் சியாங்.

 

நேற்று, இஸ்தானா நெகாரவில் பேரரசரின் முன் நடைபெற்ற அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் ஆகியோரின் பதவிப் பிரமாண சடங்கிற்குப் பின்னர், புத்ரா ஜெயாவில் அமைச்சரவை அறையில் நஜிப் இரண்டு மணி நேரத்திற்கு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.

 

ஆனால், அந்த இரு நடவடிக்கைகளையும் இருள் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த நேரம் வரையில், பால் லவ், அப்துல் வாஹிட் ஒமார் (இருவரும் பிரதமர் துறை அமைச்சர்கள்) ஆகிய இருவரும் சட்டப்படி அமைச்சர்கள் அல்லர். வேதமூர்த்தி (பிரதமர் துறை துணை அமைச்சர்) டாக்டர் லோக பால மோகன் (கூட்டரசுப் பிரதேசம்), அஹமட் பாஷா முகமட் ஹனிப்பா (உள்ளூர் வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் விவகாரம்) ஆகியோர் சட்டப்படி துணை அமைச்சர்கள் அல்லர். ஏனென்றால் அவர்களுக்கு இன்னும் செனட்டர்களாக பதவிப் பிரமாணம் செய்விக்கப்படவில்லை.

 

சட்டவிரோதமான அவ்விரு அமைச்சர்களும் – பால் லவ் மற்றும் அப்துல் வாஹிட் – அந்த இரண்டு மணி நேர முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றதால், நேற்று நடந்த அந்த அமைச்சரவைக் கூட்டம் சட்டவிரோதக் கறைபடிந்ததா என்று கிட் சியாங் வினவுகிறார்.

 

இன்று, அமைச்சர் என்ற சட்டப்பூர்வமான உரிமையற்ற பால் லவ் பிரதமர் துறையில் அமைச்சர் என்ற முறையில் நேர்காணல் அளிக்கத் தொடங்கி விட்டார். அவர் செனட்டராக பதவிப் பிரமாணம் செய்யப்பட்ட பின்னர்தான் அவரது அமைச்சர் பதவி நடப்பிற்கு வரும். அமைச்சர்களைப் பொறுத்தவரையில் இதனை அரசமைப்புச் சட்டப் பிரிவு 43 (1) (b) யும்,  துணை அமைச்சர்களைப் பொறுத்தவரையில்  அரசமைப்புச் சட்டப் பிரிவு 43A (1) றும் மிகத் தெளிவாக வரையறுத்துள்ளன என்றாரவர்.

 

இந்த நேரம் வரையில், அந்த ஐவருக்கும் அமைச்சர் மற்றும் துணை அமைச்சர் நியமனங்களை ஏற்றுக்கொள்வதற்கு வகைசெய்யும் (செனட்டர் பதவிக்கான) பதவிப் பிரமாணம் செய்விக்கப்படவில்லை என்று எனக்குத் தெரிய வந்துள்ளது என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

 

“இன்று நள்ளிரவில், “அவசரமாக” அந்த ஐவருக்கும் செனட்டர்களாக  பதவிப் பிரமணம் செய்யப்படவிருக்கிறதா?”, என்று கிட் சியாங் மேலும் வினவுகிறார்.

 

எப்படி இப்படிப்பட்ட பெரும் அரசமைப்புச் சட்ட மீறலும், பேரரசருக்கு பெரும் தர்மசங்கடமான நிலையையும் உருவாக்கியுள்ள இந்தக் கேலிக்கூத்தான அமைச்சரவை அமைக்கப்பட்டது என்பதை நஜிப் கண்டிப்பாக விளக்க வேண்டும் என்று கிட் சியாங் கோரியுள்ளார்.