ஆட்சிக்குழுப் பட்டியலுக்கு சிலாங்கூர் சுல்தான் ஒப்புதல்

1 mbசிலாங்கூரில் 2013-18 தவணைக்கான மாநில ஆட்சிக்குழு பட்டியலுக்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ்ஷா ஒப்புதல்  கொடுத்திருப்பதாக  மந்திரி புசார்  அப்துல் காலிட் இப்ராகிம் இன்று அறிவித்தார்.

இதனை அடுத்து  நாளைக் காலை மணி 9.30க்கு மாநில ஆட்சிக்குழு  உறுப்பினர்கள்   கிள்ளான் இஸ்தானா ஆலம் ஷாவில் பதவி உறுதிமொழி எடுத்துக்கொள்வர்.

“இன்று சிலாங்கூர் பக்காத்தான்  உறுப்புக்கட்சிகளைச் சந்திக்கப்  போகிறேன். அப்போது அவர்களிடம் ஆட்சிக்குழுவினர்  பட்டியலையும் அதற்கு சுல்தான்  ஒப்புதல் கொடுத்ததையும்  தெரிவிப்பேன்”.    ஷா ஆலம், இஸ்தானா புக்கிட் காயாங்கில் சுல்தான் ஷராபுடினைச் சந்தித்த பின்னர் காலிட் செய்தியாளர்களிடம் பேசினார்.

மாநிலச் சட்டமன்றத்துக்கான அவைத் தலைவரின் நியமனத்துக்கும் சுல்தானின் ஒப்புதல் கிடைத்துள்ளது என்றாரவர்.

மாநில ஆட்சிக்குழுவில் பாஸுக்கு நான்கு இடம், பிகேஆருக்கு மூன்று இடம், டிஏபி-க்கு மூன்று இடம் என  4:3:3 என்ற அமைப்பில்தான் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா என வினவியதற்கு பக்காத்தான் கட்சிப் பேராளர்களுடன் கலந்துபேசிய பின்னரே அது பற்றி அறிவிக்கப்படும் என்றார்.

அண்மையில் நடந்து முடிந்த 13வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் சட்டமன்றத்துக்கான 56 இடங்களில் 44-ஐ பக்காத்தான் வென்றது. 2008 தேர்தலில் 36 இடங்கள்தான் கிடைத்தன.

அவற்றில் 14 இடங்களை பிகேஆர் வென்றது. பாஸும் டிஏபியும் தலா 15 இடங்களை வென்றன. பிஎன்னுக்கு 12 இடங்கள் கிடைத்தன.

-பெர்னாமா