என்ஜிஓ: பேரணி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல

1 ngo13வது பொதுத் தேர்தலை அடுத்து தொடர்ச்சியாக பேரணிகள் நடத்தப்படுவது அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சி அல்ல என்று  ஒரு என்ஜிஓ-வான சுதந்திரத்துக்கான வழக்குரைஞர்கள் அமைப்பு கூறியது.

மக்கள் தங்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் தொடர்பில் பெரிய இடைவெளி நிலவுவதை உணர்ந்து பேரணிகள் மூலமாக அரசாங்கத்துக்குத் தங்கள் எதிர்ப்பைக் காட்டிக்கொள்கிறார்கள் என்று அதன் பேச்சாளர்  மிஷல் ஏசுதாஸ் குறிப்பிட்டார்.

“பேரணிகள் நாம் ஒன்றுபட உதவுகின்றன. மற்றபடி அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கம் அவற்றுக்கு இல்லை”, என்று செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் கூறினார்.

பல்வேறு கண்டனக் கூட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதையும் சமூக ஆர்வலர்களும் பக்காத்தான் ரக்யாட் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருப்பதையும் பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கறுப்பு 505 பேரணிகள் ஏற்பாடு செய்ததற்காக ஆறு பக்காத்தான்  தலைவர்கள் நேற்று தனித் தனியே நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

இன்னொரு நிலவரத்தில், பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா, ஏனிதிங் பட் அம்னோ தலைவர் ஹரிஸ் இப்ராகிம், பாஸ் உறுப்பினர் தம்ரின் கப்பார் ஆகியோர் தேச நிந்தனைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

மே 23-இல், ஆடாம் அலிமீது தேச நிந்தனை புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

TAGS: