ஒருபால் உறவுக்காரர்களை ஓரங்கட்டக்கூடாது: போப் பிரான்சிஸ்

pope francisஒருபால் உறவுக்காரர்கள் ஓரங்கட்டப்படக்கூடாது என்றும், மாறாக அவர்கள் சமூகத்திற்குள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என போப்பாண்டவர் ஃபிரான்சிஸ் கூறியுள்ளார்.

ஒருபால் உறவுச் செயல்கள் பாவம் மிக்கவையே ஒழிய ஒருபால் உறவு பாலியல் விருப்பத் தெரிவு என்பது பாவம் அல்ல என்ற ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் நிலைபாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஒருபால் உறவுக்காரர்கள் தொடர்பில் தனக்கு முன்பு பாப்பரசராக இருந்தவர்களுடைய கருத்துகளிலிருந்து பாப்பரசர் ஃபிரான்சிஸின் கருத்து மாறுபட்டிருப்பதாகத் தெரிகிறது.

ஒருபால் உறவுக்காரர்கள் இப்படிப்படிப்பட்டவர்கள்தான் என தீர்மானித்துக்கொள்வதோ, சமூகத்திலிருந்து அவர்களை ஓரங்கட்டுவதோ கூடாது என்று போப்பாண்டவர் பிரான்ஸிஸ் கூறியுள்ளார்.

பிரசிலில் இருந்து வத்திகானுக்குத் திரும்புகையில் விமானத்தில் பறந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ஃபிரான்சிஸ், “ஒருவர் ஒருபால் உறவுக்காரராக இருக்கிறார். அவர் கடவுளை நாடுகிறார். அவருக்கு நல்லெண்ணம் இருக்கிறது என்றால், அவர் ஒருபால் உறவுக்காரராக இருப்பதில் பிழை காண்பதற்கு நான் யார்? என்று தெரிவித்திருந்தார்.

அதேநேரம் ‘ஒருபால் உறவுக்காரர்கள் ஒரு அழுத்தக் குழுவாக செயல்படுவது’ என்று குறிப்பிட்டு அதனை போப்பாண்டவர் கண்டித்தார்.

“ஒருபால் உறவுக்காராக இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் அவர்கள் அழுத்தக் குழுவாக செயல்படுவதுதான் பிரச்சினை.”

திருச்சபையில் பெண்களுக்குள்ள இடம் பற்றி கருத்து தெரிவித்த போப்பாண்டவர், மதகுருக்களாக பெண்கள் நியமிக்கப்பட முடியாது என்ற திருச்சபையின் நிலைபாட்டை விளக்கினார்.

ஆனால் பெண்களுக்கு கூடுதலான பங்களிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் கூறினார்.

“பூசை மேடை உதவியாளர்களாகவும் தொண்டு அமைப்பின் தலைவியாகவும் மட்டுமே இருக்கமுடியும் என்று பெண்களின் பங்களிப்பை குறுக்கிவிடக் கூடாது, பெண்களுக்கு கூடுதலான பங்களிப்பு வேண்டும்” என போப்பாண்டவர் கூறினார். -BBC