நான்கு கோப்பை தேனீர், காபி குடியுங்கள்: ரத்த அழுத்தத்திற்கு விடைகொடுங்கள்!

woman_drinking_coffeeலண்டன்: நாள் ஒன்றுக்கு, நான்கு கோப்பை தேனீர் அல்லது காபி அருந்துவோருக்கு ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது மிகவும் குறைவு என, சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வந்தனர். இதற்கு பலன் தரும் வகையில், காபி, தேனீர் பருகாதவர்களை விட, அவற்றை பருகும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் ஏற்படுவது மிகவும் குறைவு என்பதை கண்டுபிடித்தனர்.

இதற்காக, 16 முதல் 95 வயது உடைய, 1.77 லட்சம் பேரிடம், கேள்வி-பதில் முறையில் ஆய்வு ஒன்றை நடத்தினர். அதில், நாள் ஒன்றுக்கு, எத்தனை முறை காபி அல்லது தேனீர் பருகுவீர்கள் என்பது போன்ற வினாக்கள் இதில் இடம் பெற்றன. அத்துடன், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நபர்கள், மூன்று விதமாக தரம் பிரிக்கப்பட்டனர்.

அதாவது, காபி, தேனீர் பருகாதவர்கள், நாள் ஒன்றுக்கு, 4 அல்லது 5 கோப்பை காபி அல்லது தேனீர் அருந்துபவர்கள் மற்றும் கணக்கே இல்லாமல் இவற்றை குடிப்பவர்கள் என்று பிரிக்கப்பட்டனர். இதில், அளவுக்கு அதிகமாக, காபி, தேனீர் குடிப்பவர்களுக்கு லேசான ரத்த அழுத்தம் இருந்தது. ஆனால், இவற்றை அறவே தவிர்த்தவர்களுக்கு அதிகப்படியான ரத்த அழுத்தம் இருந்தது. அதே நேரத்தில், நான்கு கோப்பை பருகுபவர்களுக்கு இந்த பிரச்னை ஏற்படவில்லை.

இது குறித்து, இந்த ஆய்வை மேற்கொண்ட, பாரீசில் உள்ள, நோய் தடுப்பு மற்றும் மருத்துவ ஆய்வு மையத்தை சேர்ந்த, பர்னோ பன்னியர் கூறுகையில், “தேனீரை பருகும்போது அது, நம் ரத்தத்தில் கலப்பதால், மனிதர்கள் மிகவும் உற்சாக மனநிலையில் இருக்கின்றனர். இதனால் தான் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் அவர்களுக்கு மிகக் குறைவாகவே உள்ளது’ என்றார்.