குழந்தை கடத்தல் வதந்தியால் வங்கதேசத்தில் கும்பல் கொலை செய்யப்பட்ட 8 பேர்

வங்கதேசத்தில் குழந்தை கடத்தல்காரர்கள் குறித்து இணையத்தில் பரவிய புரளியை அடுத்து நடத்தப்பட்ட கும்பல் தாக்குதல் சம்பவங்களில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வங்கதேச தலைநகர் டாக்காவிற்கு தெற்கே பத்மா மேம்பாலம் கட்டுவதற்கு நரபலி கொடுக்க குழந்தைகள் தேவைப்படுவதாக கிளம்பிய வதந்தியை அடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து, கடத்தல்காரர்கள் என்று தங்கள் சந்தேகத்திற்குரிய வகையில் தென்பட்ட எட்டு பேரை மக்கள் கும்பலாக அடித்து கொன்றனர்.

ஆனால், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட உண்மையில் குழந்தை கடத்தல்காரர்கள் கிடையாது என்பதை அந்நாட்டு காவல்துறை உறுதி செய்துள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த வதந்தி தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. -BBC_Tamil

TAGS: